Last Updated : 24 Jun, 2022 08:18 PM

 

Published : 24 Jun 2022 08:18 PM
Last Updated : 24 Jun 2022 08:18 PM

ஓரே வீட்டில் 11 மரணங்கள், சாட்சியான டைரி - ‘House of Secrets: The Burari Deaths’ ஆவணப்படம் எப்படி இருக்கிறது?

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம், டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் நாட்டையே அதிர செய்த அந்தச் சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

புகாரி பகுதியில் பல ஆண்டுகளாக பாட்டியா குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக என்று சொல்லலாம். அக்குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் (7 பெண்கள், நான்கு ஆண்கள்) மரணம் நெடு நாட்களுக்கு பிறகு இந்திய தேசம் சந்தித்த திகில் செய்தியாகவே அறியப்பட்டது. இதனால் இந்த வழக்கை காட்சி ஊடகங்கள் தங்கள் டிஆர்பி-க்காக கையில் எடுத்தது.

போலீசார் ஒரு பக்கம் மரணத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிவதில் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருந்த சமயம் அது. மறுபக்கம் ஊடகங்கள் வெளியிட்ட அறம் மீறிய செய்திகளால் போலீசாருக்கு மரணங்களுக்கன உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டிய அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இறுதியில் மரணங்களுக்கான காரணம் போலீசாரால் கண்டறியப்பட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் என்ன நடந்தது? ஏன் 11 பேரும் ஒரே நாளில் தற்கொலை செய்துக் கொண்டனர். இல்லை இது ஊடகங்கள் கூறியதை போல கொலையா? மாந்திரீகமா? என்ற முழு விவரம் ஒரு சராசரி பார்வையாளனுக்கு சென்றடைந்திருக்கிறதா? என்பது பெரும் கேள்வியாக இருந்து வந்தது. அதற்கான விடையை தான் நெட்ஃப்ளிக்ஸ் கொடுத்துள்ளது. | வீடியோ வடிவில் காண > 1 வீடு... 11 மரணங்கள்... ‘சாட்சி’ டைரி... |

House of Secrets: The Burari Deaths 2021 என்ற தலைப்பில் இந்த மரணங்களுக்கான உண்மையான காரணத்தை ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. மூன்று எபிசோடுகளை கொண்டிருந்தது இந்த ஆவணப்படம்.

11 பேர் மரணம் என கண்டறியப்பட்ட அந்த கொடூர நாளின் காலை நேரத்துடன் தொடங்குகிறது இந்த ஆவணப் படம். அவர்களது மரணம் நிகழ்வதற்கு முன்னர் அந்த வீட்டில் செய்த யாகம், வீட்டின் பெட்டகம் மாறியான மேற்பரப்பில் தொங்கிய நிலையில் 10 வண்ண ஷால்கள் என அந்த ஆவணப்படம் நகர்கிறது. இடையிடையே ஊடகங்கள் இந்த வழக்கை தொகுத்து வழங்கிய நேரலை காட்சிகளும் அப்படியே இதில் செய்யப்பட்டிருக்கிறது.

பல்வேறு சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த பிறகு இந்த 11 பேரின் மரணத்தில் வெளியாட்கள் யாரும் ஈடுபடவில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு டெல்லி போலீசார் வருகின்றனர். வெளியாட்கள் ஈடுபடவில்லை என்றால அந்த மரணங்கள் எவ்வாறு நடந்தது? என போலீசார் குழப்பி இருந்த நேரத்தில்தான் பாட்டியா வீட்டின் பூஜை அறையில் சில டைரிகளை போலீசார் கைப்பற்றுகின்றனர். அந்த டைரிகள் 2007-ஆம் ஆண்டு முதல் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து 11 வருடங்களாக அந்த டைரியில் உள்ள கட்டளை குரலின் படியே பாட்டியா குடும்பம் வழிநடத்த பட்டிருக்கிறார்கள். யாருடையது அந்த குரல்? ஏன் அந்த குரல் 11 பேரின் மரணத்தை நிகழ்த்தியிருக்கிறது? இதனை அடுத்தடுத்த எபிசோடுகளில் திகிலூட்டும் த்ரில்லர் ஜானரில் பார்வையாளர்களுக்கு காட்சிகள் விவரணை செய்யப்பட்டுள்ளது.

க்ரைம் ரிப்போர்ட்டர்கள், பாட்டியா குடும்பத்தின் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், இவ்வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், மன தத்துவவியல் நிபுணர்கள் என அனைவருமே ஆவணப்படத்திற்கு சிறு தேக்கமும் ஏற்படாத வண்ணம் உண்மையை நமக்கு கூறி இருக்கிறார்கள்.

பாட்டியா குடும்பத்தின் பூஜை அறையில் கண்டறியப்பட்ட அந்த டைரிகள் தான் இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது

ஒரு முழுமையான ஆவணப்படமாக இதனை இயக்குனர் லீனா யாதவ் வழங்கி இருக்கிறார். ஆவணப்படத்தில் ஒரு புகைப்படத்தை இயக்குனர் அடிக்கடி காண்பிப்பார். அது போபால் சிங் பின்னால் லலித்தின் கண் தெரியும் புகைப்படம். (அந்த படத்தை காண்பிக்கும் போதெல்லாம் அச்சம் உண்டாவதை நீங்கள் உணரலாம்) இயக்குனரின் கதை சொல்லும் யுக்திக்கு அந்த ஒரு காட்சியே சான்று.

பகுத்தறிவை மறந்து அளவுக்கு மீறிய மூடநம்பிக்கைகளும், மத நம்பிக்கைகளும் பின்பற்றுபவர்களுக்கு நடந்த கதைத்தான் பாட்டியா குடும்பத்திற்கு நடந்திருக்கிறது. மத நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை விமர்சித்து உள்ளதோடு ஆண்கள்தான் குடும்பத்தை வழி நடத்த வேண்டும், அவர்களது கட்டளையைதான் குடும்பத்தினர் பின்பற்ற வேண்டும் என்ற இந்திய ஆணாதிக்க மன நிலையையும் நோக்கி இந்த ஆவணப்படம் முக்கிய கேள்வியை எழுப்பி இருக்கிறது.

மேலும், மனசிதைவு நோயின் தாக்கத்தையும், இந்திய சமூகம் இதனை விரிவாக பேச தயங்குகிறது என்ற உண்மையையும் இந்த ஆவணப்படம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

உண்மையில் அந்த மரணங்கள் மிகவும் பரிதாபமானவை. நவீன தலைமுறையை சேர்ந்த 5 பேர் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பலியாகி இருக்கிறார்கள். அவர்களின் குரல்களை முற்றிலுமாக மவுனம் ஆக்கியது எப்படி?

இறுதியாக இந்த மரணங்கள் குறித்து போலீஸார் தரப்பில் தற்கொலை என்று சொல்ல இயலாது. இதனை எதிர்பாராத மரணம் என்றே அழைக்கின்றன.

அந்த எதிர்பாராத மரணங்கள் எப்படி நடந்தது என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்பு கொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x