Published : 21 Apr 2025 09:41 AM
Last Updated : 21 Apr 2025 09:41 AM
அமெரிக்க நீதிமன்றங்களில் நடக்கும் சிக்கலான வழக்குகளில் ‘ஜூரர்ஸ்’ எனப்படும் உறுப்பினர்கள் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கின் முதல் நாளிலிருந்தே இந்தக் குழு நீதிமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வர். 15 பேர் கொண்ட இந்த குழு வழக்கில் நடக்கும் இருதரப்பு வாதங்கள், சாட்சியங்களின் வாக்குமூலம் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும். கடைசியாக இறுதி வாதங்களுக்குப் பிறகு இவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். அதைக் கொண்டு இந்தக் குழுவினர் தனியாக ஆலோசித்து நீதிபதியிடம் இறுதி அறிக்கையை குறிப்பிட்ட அவகாசத்துக்குள் சமர்ப்பிப்பர். அதன் அடிப்படையிலேயே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். இந்த ஜூரர்கள் பொதுமக்களில் இருந்தே ஒவ்வொரு வழக்குக்கும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்படியான நடுவர் குழுவில் இருக்கும் ஒருவரே அந்த வழக்கில் தொடர்புடையவராக இருந்தால்? இதுதான் ‘ஜூரர்’ படத்தின் ஒன்லைன். ஜார்ஜியாவில் உள்ளூர் வார பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை பார்ப்பவர் ஜஸ்டின் (நிக்கோலஸ் ஹோல்ட்). கெண்டால் கார்டர் என்ற இளம் பெண்ணின் கொலை வழக்கில் 15 பேர் கொண்ட ஜூரர் குழுவில் ஒருவராக தேர்வு செய்யப்படுகிறார்.
பார் ஒன்றில் கெண்டால் கார்டருக்கும் அவரது காதலனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இதனையடுத்து பாரிலிருந்து கோபித்துக் கொண்டு மழையில் சாலையில் நடந்து செல்லும் கெண்டால் கார்டர் மறுநாள் பாலம் ஒன்றுக்கு கீழே பிணமாக கிடக்கிறார். இதனையடுத்து காதலன் ஜேம்ஸ்தான் கெண்டால் கார்டரை கொலை செய்ததாக போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதான் வழக்கு.
வழக்கின் முதல் நாள் நீதிமன்றத்தில் ஜூரர் குழுவில் வந்து அமரும் ஜஸ்டினுக்கு, கெண்டால் கார்டர் மரணத்துக்கு தன்னால் நடந்த விபத்து தான் காரணம் என்று புரிந்து விடுகிறது. வழக்கு நடக்க நடக்க குற்ற உணர்ச்சியில் உழல்கிறார் ஜஸ்டின். ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது, அதேநேரம் தானும் நியாயமற்ற முறையில் தண்டனை பெறக் கூடாது என்பதற்காக சில வேலைகளை செய்கிறார். வழக்கின் முடிவு என்னவானது? உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட்டாரா என்பதை அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் பேசியிருக்கிறது ‘ஜூரர் #2’
படத்தின் இயக்குநர் நம் அனைவருக்கும் பரிச்சயமான 94 வயது க்ளின்ட் ஈஸ்ட்வுட் என்பது ஆச்சர்யம். 60-வது வயதுக்கு முன்பாகவே பெரும்பாலான இயக்குநர்கள் ஃபீல்டு அவுட் ஆகிவிடும் சூழலில் ஈஸ்ட்வுட், ஸ்கார்செஸி போன்றோர் இந்த வயதிலும் மிகவும் ஆக்டிவ் ஆக, அப்டேட் ஆக இயங்கிக் கொண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல.
’அன்ஃபர்கிவன்’, ‘ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுன்டி’, ‘மில்லியன் டாலர் பேபி’ என ஈஸ்ட்வுட்டின் கதை சொல்லல் எப்போதும் ஏமாற்றுவதில்லை. ஜானதன் ஆப்ரம்ஸ் எழுதிய திரைக்கதையை வியத்தகு முறையில் திரைக்கு கொண்டு வந்து ஒரு அசத்தலான படத்தை கொடுத்துள்ளார் ஈஸ்ட்வுட்.
இப்படி ஒரு கதை வேறு யாரிடம் கிடைத்திருந்தாலும் கொலைக்கான காரணத்தை படத்தின் இறுதியில் ட்விஸ்ட் ஆக வைத்து ஒரு த்ரில்லர் ஆக கொண்டு சென்றிருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால், படம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே இதனை போட்டு உடைத்து பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறார் ஈஸ்ட்வுட். கோர்ட் ரூம் டிராமா என்பதால் பெரும்பாலான படம் வசனங்களின் அடிப்படையிலேயே நகர்ந்தாலும் படம் முழுக்க நம்மை ஒருவித மெல்லிய பதைபதைப்புடனே வைத்திருப்பதுதான் இப்படத்தின் வெற்றி.
படத்தில் நாயகனின் குற்ற உணர்ச்சியை காட்சிப்படுத்திய விதம் பாராட்டப்பட வேண்டியது. தான் மாட்டிக் கொண்டால் தன்னை நம்பி இருக்கும் கர்ப்பவதியான தன் மனைவியின் நிலையை நினைத்து உழல்வது, அதேநேரம் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபரையும் காப்பாற்ற வேண்டும் என அவர் எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு ஏற்றபடி ஜஸ்டின் கதாபாத்திரத்தில் நடித்த நிக்கோலஸ் ஹோல்ட் அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்திருக்கும் டோனி கோலெட் மற்றொரு பலம். முதலில் தன்னுடைய தரப்பு வாதங்கள் உண்மை என உறுதியாக நம்புவதும், பின்னர் ஓய்வு பெற்ற போலீஸ்காரரிடமிருந்து கிடைத்த ஆவணங்களை பார்த்த பிறகு அவருக்குள் ஏற்படும் மாற்றங்களும் என அபாரமான நடிப்பு.
வெறும் கோர்ட்ரூம் டிராமாவாகவே கொண்டு சென்று சலிப்பை ஏற்படுத்தாமல், ஜூரர்கள் ஆலோசிக்கும் போது ‘12 ஆங்க்ரி மென்’ பாணிக்கு மாறும் இடம் கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது.
இளம் பெண்ணின் மரணத்துக்கு தான் தான் காரணமா என்று நாயகனுக்கு உறுதியாக தெரியாது. ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் கொலையாளி இல்லை என்று உறுதியாக தெரியும். நாயகன் எதுவுமே செய்யாமல் இருந்தால் கூட குற்றம்சாட்டப்பட்டவருக்கு மிக சுலபமாக தண்டனை கிடைத்து விடும் அளவுக்கு ஆதாரங்கள் அவருக்கு எதிராக இருக்கின்றன. ஆனால், மனம்தான் மிகப் பெரிய நீதிமன்றம் அல்லவா? வாழ்க்கை முழுக்க தன்னால் தன் மனசாட்சியை எதிர்கொள்ள முடியாது என்ற பயம் அவனை துரத்துகிறது.
இதுதவிர மிக நுணுக்கமான மற்றொரு கேள்வியையும் படம் முன்வைக்கிறது. என்னதான் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும், ‘உண்மை மட்டுமே நீதியாகி விடுமா?’ என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. திடீர் திருப்பங்களோ, நீள நீள ஆக்ரோஷ வசனங்களோ இல்லாத எளிமையான அதே நேரம் அழுத்தமான கோர்ட்ரூம் டிராமா பார்க்க விரும்புவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இந்த ஜூரர் #2. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT