

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சசிகுமாரின் குரலுடன் தொடங்குகிறது இந்த ட்ரெய்லர். ஜல்லிக்கட்டு காளை, இறந்தவரின் எலும்புகூடைதோண்டி எடுப்பது என காட்சிகள் மாறுகின்றன. காவல் துறை அதிகாரியான சசிகுமாரின் கண்டுபிடிப்பால் மணி என்ற இளைஞன் குற்றவாளி என தீர்ப்பாகி, அவன் சிறைக்கு செல்கிறான்.
தன்னால்தான் மணி சிறையில் இருப்பதாக உணரும் சசிகுமார், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறார். அவரின் நேர்மை உரசி பார்க்கப்படுகிறது. யார் இந்த மணி, சசிகுமார் அப்படி என்ன கண்டுபிடித்தார் என்கிற எதிர்பார்ப்பை தூண்டி விடுகிறது ட்ரெய்லர்.
வயல்வெளி, வெயில் காயும் தெருக்கள், ஜல்லிக்கட்டு, கோயில் திருவிழாக்கள் முதலான பின்புலங்களும், ‘ஒரு தினுசா’, ‘மண்டைய கழுவிட்டான்’, ‘சஞ்சலமா இருக்கு’ போன்ற வட்டார வழக்குகளும் இந்த முறை நம்மை மதுரைக்குள் அழைத்துச் செல்லலாம். இந்த வெப் தொடர் ஆக.7-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.