

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தாமரைச்சேரி அருகில் உள்ளது, கூடத்தாயி என்ற கிராமம். இங்கு ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியான ஜான் தாமஸ், அவருடைய மனைவி அன்னம்மா, மகன் ரோய் தாமஸ், அன்னம்மாளின் அண்ணன் மேத்யூ, ஜான் தாமஸின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் என அனைரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.
2002-ம் ஆண்டு முதல் 2016 வரை இவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் அனைவரின் இறப்பும் ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சொத்துகளை அபகரிக்க அதே குடும்பத்தைச் சேர்ந்த மருமகள் ஜோலிதான் இதைச் செய்தது என்பதும் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு கேரளாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் ‘அனலி’ என்ற வெப் தொடரை மிதுன் மானுவல் தாமஸ் என்பவர் உருவாக்கியுள்ளார். நிகிலா விமல், லியோனா லிஷோய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இதன் டீஸர் சமீபத்தில் வெளியானது. இது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த வெப்தொடர், கூடத்தாயி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இத்தொடரை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோலி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
அத்தொடர் வெளிவந்தால் நேர்மையான விசாரணையைப் பாதிக்கும் என்று அம்மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண், டீஸரில் காணப்படும் சில ஒற்றுமைகளைத் தவிர, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி, தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார்.