

ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் நாளை (மார்ச் 22) ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த ஜனவரி 25-ம் தேதி வெளியான இந்தி படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்தது.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் முன்னேற்றத்தைக் கண்டது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்த படம் 8 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
படம் வெளியாகி 55 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் படம் ரூ.1,050 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.541 கோடியை வசூலித்து இந்தியில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 22-ம் தேதியான நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.