Published : 28 Oct 2022 03:23 PM
Last Updated : 28 Oct 2022 03:23 PM

ஓடிடியில் வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ -  ‘ரென்ட்’ செலுத்தி மட்டுமே பார்க்க முடியும்!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' படம் வெளியாகியுள்ளது. ஆனால், வழக்கமான சந்தாதார்களால் படத்தை பார்க்க முடியாது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வாடகை (Rent) முறையில் படத்தை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, வழக்கமாக படம் ஓடிடியில் வெளியாகும்போது அதன் சந்தாதாரராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் எந்த தொகையும் செலுத்தி படத்தை பார்க்க வேண்டியதில்லை. ஆனால், தற்போது வாடகை முறையில் வெளியாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தை பார்க்க பார்வையாளர்கள் ரூ.199 கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை செலுத்திய தேதியிலிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே உங்களால் படத்தை பார்க்க முடியும். தரவிறக்கம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாடகை முறையில் வெளியாயிருக்கும் இப்படம் நவம்பர் 4-ம் தேதி வழக்கமான முறையில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x