Published : 20 Jun 2022 07:59 PM
Last Updated : 20 Jun 2022 07:59 PM

“இது பெய்டு புரமோஷன் இல்லை” - ‘சுழல்’ இணையத் தொடரை பாராட்டிய உதயநிதி 

'சுழல்' இணையத் தொடரை உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், 'இது பெய்டு புரமோஷனில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'ஓரம் போ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, 'வ - குவாட்டர் கட்டிங்', 'விக்ரம் வேதா' போன்ற படங்களை இயக்கியுள்ளனர். 'விக்ரம் வேதா' திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் கவனம் பெற்ற இந்த தம்பதியினர் அடுத்ததாக 'சுழல்' என்ற இணையத் தொடருக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் கடந்த 17-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது 'சுழல்' இணையத்தொடர். விறுவிறுப்பாக க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சுழல் விமர்சனத்தை வாசிக்க : முதல் பார்வை | சுழல் - திருப்பங்களால் விறுவிறுப்பாக சுழலும் த்ரில்லிங் தொடர்!

பலரும் இந்த தொடருக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினும் தொடரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வாவ்... தமிழில் சிறந்த இணையத் தொடர். ஒட்டுமொத்த 'சுழல்' குழுவுக்கும் வாழ்த்துகள். மிஸ் பண்ணாம பாருங்க. இது பெய்டு புரமோஷனில்லை'' என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு 'சுழல்' தொடரில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஸ்ரேயா ரெட்டி, ''உதய் இது உங்கள் மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்பது எனக்கு தெரியும். நன்றி'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x