Published : 22 Feb 2024 06:04 PM
Last Updated : 22 Feb 2024 06:04 PM

‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநருடன் கைகோத்த யோகிபாபு

சென்னை: ‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நீண்ட நாட்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் யோகிபாபு, லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரமேஷ்பாபு, ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நடைபெற்று வருகிறது. நிவாஸ் கே பிரசன்னா படத்துக்கு இசையமைக்கிறார். படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட உள்ளது.

படம் குறித்து நடிகர் யோகி பாபு கூறுகையில், “சுரேஷ் சங்கையாவின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள். அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார்.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறுகையில், “இந்தப் படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன், பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும், இப்படத்தில் சமூகத்துக்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x