Last Updated : 12 Sep, 2021 10:56 AM

 

Published : 12 Sep 2021 10:56 AM
Last Updated : 12 Sep 2021 10:56 AM

முதல் பார்வை - டக் ஜகதீஷ்

பூதேவிபுரம் கிராமத்தில் ஊர்த் தலைவராக இருப்பவர் ஆதிசேஷ நாயுடு (நாசர்). இவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன்கள் போஸ் (ஜெகபதி பாபு), ஜகதீஷ் (நானி). இரண்டாவது மனைவிக்கு மூன்று மகள்கள். ஊர் எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும் என்று ஆதிசேஷ நாயுடு விரும்புகிறார்.

ஊரில் நடக்கும் பல பிரச்சினைகளையும் நியாயமான முறையில் தீர்த்து வைக்கிறார். தனக்குப் பிறகு தனது மூத்த மகன் போஸ் தன்னுடைய பணிகளை தொடர வேண்டும் என்று விரும்புகிறார். இரண்டாவது மகன் ஜகதீஷ் என்கிற டக் ஜகதீஷ் வெளிநாட்டுச் சென்று செட்டில் ஆகவேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த பிள்ளையாக இருக்கிறார். திடீரென ஒரு நாள் ஆதிசேஷ நாயுடு இறக்கவே குடும்பத்தின் நிலை தலைகீழாக மாறுகிறது. இன்னொரு பக்கம் ஆதிசேஷ நாயுடு தானமாக கொடுத்த ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயலும் வில்லன் வீரேந்திரா (டேனியல் பாலாஜி). குடும்ப பிரச்சினையையும் ஊர்ப் பிரச்சினையையும் நாயகன் எப்படி தீர்க்கிறார் என்பதே ‘டக் ஜகதீஷ்’ படத்தின் கதை.

இயக்குநர் ஷிவா நிர்வாணாவுடன் நானி இணைந்துள்ள இரண்டாவது படம். டக் ஜகதீஷ் என்ற பெயருக்கு படத்தில் நாயகன் ஒரு காரணம் சொல்கிறார். ஆனால் படத்துக்கும் அதற்கும் கடைசி வரை என்ன சம்பந்தம் என்றே சொல்லவில்லை.

காலம் காலமான இந்திய சினிமாக்களில் பார்த்து சலித்த அதே அரதப் பழைய டெம்ப்ளேட் கதை. ஆனால் அதை சொன்னவிதத்திலும் பழைய க்ளிஷே காட்சிகளையே இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான புதுமைகள் என்று எதுவும் இல்லை.

நானி, ஜகபதி பாபு, நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ரோஷினி, தேவதர்ஷினி என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. யார் யார் என்ன உறவுமுறை என்று பிடிபடவே சிறிது நேரம் எடுக்கிறது. அனைவருக்கும் சமமான காட்சிகளை வைக்கிறேன் என்று யாருக்கும் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் போய்விடுகிறது.

எமொஷனல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகளிலும் தனது வழக்கமான டிரேட்மார்க் நடிப்பை குறையின்று செய்திருக்கிறார். ஜெகபதி பாபு கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கப் போகிறது என்று படம் பார்ப்பவர்கள் ஆரம்பத்திலேயே கணித்துவிடும்படியான காட்சியமைப்புகள். இதனால் அவர் தொடர்பான ட்விஸ்ட் வ்ரும்போது அது பார்ப்பவர்களுக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா என இரண்டு நாயகிகள். இருவருக்குமே நடிப்பதற்கான வாய்ப்பு பெரிதாக இல்லை. படத்தின் ரிது வர்மா நானி போகும் இடங்களுக்கெல்லாம் உடன் செல்வதற்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார். ரோஹினி, தேவதர்ஷினி, நாசர் என அனைவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை குறையின்றி செய்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளை நானியும், ஜெகபதி பாபுவுமே சுமந்து செல்வதால் மற்றவர்களின் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை.

திரையரங்க ரசிகர்களுக்காக அமைக்கப்பட்ட ஸ்லோமோஷன் காட்சிகளும், மாஸ் வசனங்களும் படம் நெடுகிலும் வருகின்றன. படம் முழுக்க லாஜிக் மீறல்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.

வெளிநாடு சென்று செட்டில் ஆவதே இலக்கு என்று வாழும் ஹீரோ திடீரென அரசு தேர்வை எழுதி வருவாய்த் துறை அதிகாரியாக மாறி சொந்த ஊருக்கே வருவதெல்லாம் அக்மார்க் பூசுற்றல். ஊரில் இருக்கும் அண்ணன் தம்பி தகராறு முதல் வாய்க்கால் சண்டை முதல் அனைத்தையும் பேசித் தீர்க்கிறார்

ஹீரோ. படத்தில் ஆரம்பத்தில் காட்டப்பட்ட சகோதர சண்டையை பேசித் தீர்ப்பதற்காக நானி அவர்கள் வீட்டுக்கு வரும் காட்சி எந்தவொரு சுவாரஸ்யமும் இன்றி அமைக்கப்பட்டுள்ளது ஏமாற்றம். இது போல படத்தில் பல காட்சிகள் தட்டையாக எழுதப்பட்டுள்ளன. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் ஜெகபதி பாபுவுக்குள் ஏற்படும் மாற்றத்தை காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்திற்கு எமோஷனல் காட்சிகள் வெகுவாக கைகொடுத்துள்ளன.

தமனின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை, கோபி சுந்தரின் பின்னணி இசை மாஸ் காட்சிகளையும், எமோஷனல் காட்சிகளையும் தூக்கி நிறுத்துகிறது.

ஃபேமிலி எண்டெர்டெய்னராக எடுக்க நினைத்து குடும்பப் படமாகவும் இல்லாமல், ஆக்‌ஷன் படமாகவும் இல்லாமல் அரதப்ழைய திரைக்கதை அமைப்பில் தடுமாறி நிற்கிறது டக் ஜகதீஷ். விடுமுறை தினத்தில் குடும்பத்தோடு ஒருமுறை பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x