Published : 15 Nov 2016 10:51 AM
Last Updated : 15 Nov 2016 10:51 AM

உங்கள் குரல்: உதகையில் சுகாதாரமற்ற நிலையில் கழிப்பிடங்கள்

நோய் பரவும் அபாயம் இருப்பதாக புகார்

உதகையில் சுகாதாரமற்ற நிலையில் கழிப்பிடங்கள் உள்ளதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு மார்க்கெட், கடை வீதிகளுக்கு வருகின்றனர்.

இதேபோல, பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் உதகை நகருக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கு, நகரில் கழிப்பிட வசதி என்பதே கிடையாது.

இதுகுறித்து ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் டி.ஆல்துரை தெரிவித்ததாவது:

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் நவீன கழிப்பிடம் கட்டுவதாகக் கூறி, நகரில் இருந்த சில கழிப்பிடங்களை இடித்துவிட்டு, தற்போது ஆங்காங்கே இரு பெட்டிகளை மட்டுமே வைத்துள்ளனர். இதில், பலவற்றுக்கு தண்ணீர் இணைப்பு கிடையாது. முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால், அதன் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உதகை நகரில் அவசரத் தேவைகளுக்குகூட கழிப்பிடம் இல்லாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பிடங்களை சீரமைக்கக் கோரி பலர் மனுக்கள் அளித்தும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.பிரபாகரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “உதகை நகரில் இருந்த கழிப்பிடங்கள் இடிக்கப்பட்டு, புதிதாக ‘நம்ம டாய்லெட்கள்’ கட்டப்பட்டுள்ளன. மேலும், 12 கழிப்பிடங்கள் புதிதாக கட்டப்படும். நகரில் உள்ள 3 கழிப்பிடங்கள் ஏலம் விடப்பட்டன. ஆனால், யாரும் ஏலம் கோரவில்லை.

ஒரு வாரத்துக்குள் அனைத்துக் கழிப்பிடங்களும் மீண்டும் ஏலம் விடப்படும். இதற்கான அறிவிப்பு, நாளிதழ்களில் வெளியிடப்படும். தனி நபர்கள் மட்டுமின்றி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களும் ஏலம் எடுக்கலாம். நகராட்சி நிர்வாகம் சார்பில், கழிப்பிடங்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” என்றார்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x