Last Updated : 12 Oct, 2016 09:27 AM

 

Published : 12 Oct 2016 09:27 AM
Last Updated : 12 Oct 2016 09:27 AM

நம்மைச் சுற்றி: நோபல் பரிசு எப்படி வந்தது?

நோபல் பரிசை உருவாக்கியவர் யார் தெரியுமா? அவர் பெயர் ஆல்ஃபிரெட் நோபல் (21.10.1833). ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

அவருக்கு வேதியியலாளர், பொறியாளர், ஆயுத உற்பத்தி நிறுவன உரிமையாளர், கண்டுபிடிப்பாளர் எனப் பல முகங்கள். அவரது 355 கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை ராணுவம் தொடர்பானவை.

ஒரு நாள், பிரெஞ்ச் செய்தித் தாள் ஒன்றில் ‘மரண வியாபாரி மரணம்’ என்ற தலைப்பில் நோபல் இறந்துவிட்டதாகத் தவறான செய்தி வந்தது. அதைப் படித்த நோபல் அதிர்ந்தார். உண்மையில், அவரது சகோதரர்தான் இறந்திருந்தார். இந்தச் சம்பவம் அவரைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்தது. மரணத்துக்குப் பின்பு தனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் விளைவுதான் நோபல் பரிசின் உதயம்.

இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய ஐந்து துறைகளில் மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்குப் பரிசு வழங்கத் தனது சொத்தைப் பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதிய நோபல் 63-வது வயதில் இறந்தார். அவரது இறப்புக்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 1901-ல் முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

1905-ல் சுவீடனில் இருந்து நார்வே தனி நாடாகப் பிரிந்தது. அதனால், அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே வழங்குகிறது. 1968-ல் சுவீடன் மத்திய வங்கி ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து, நோபலின் பெயரில் பொருளாதாரத் துறைக்கான ஒரு பரிசை ஏற்படுத்தியது. அதன் பின்னர், இனி புதிய பரிசுகளை வழங்குவதில்லை என நோபல் அறக்கட்டளை முடிவெடுத்தது. நோபல் அறக்கட்டளையின் இப்போதைய சொத்து மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய். நோபல் பரிசினை இதுவரை இயற்பியலுக்காக சர்.சி.வி.ராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வேதியியலுக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) எனும் தமிழர்கள் பெற்றுள்ளனர். இந்தியாவின் அன்னை தெரசா, மியான்மரின் ஆங் சான் சூச்சி, வங்கதேசத்தின் முகமது யூனுஸ் ஆகியோரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். அதற்குப் பிறகு பாகிஸ்தானின் மலாலாவும் இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தியும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஆலிவர் ஹார்ட் மற்றும் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் (பொருளாதாரம்) (இருவரும் அமெரிக்கர்கள்). கொலம்பியா நாட்டு அதிபர் யுவான் மன்வேல் சந்தோஸ் (அமைதி), பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜே.தவ்லெஸ், டங்கன் ஹால்டேன் மற்றும் மைக்கேல் காஸ்டர்லிட்ஸ் (இயற்பியல்), ஜப்பானைச் சேர்ந்த யொஷினோரி ஒசுமி (மருத்துவம்), ஜான் பியர் சொவாஜ் (பிரான்ஸ்), ஃப்ரேஸர் ஸ்டாடர்ட் (அமெரிக்கா), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார் ஃபெரிங்கா (வேதியியல்) ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x