Published : 28 Apr 2016 11:15 AM
Last Updated : 28 Apr 2016 11:15 AM

வாக்காளர் வாய்ஸ்: என்ன கேள்வி கேட்பீர்கள்?

இந்த வாரத்துக்கான தலைப்பு:

வேட்பாளர்கள் கும்பிட்ட கரங்களுடன் வீதி வீதியாக வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். உங்களைத் தேடி வரும், உங்கள் தொகுதி வேட்பாளர்களிடம் நீங்கள் முக்கியமாக என்ன கேள்வி கேட்பீர்கள். அதற்கு அவர் தரும் எந்த பதில் உங்களை திருப்திபடுத்தும். கேள்வியையும் பதிலையையும், ஏன் இந்த கேள்வி என்ற காரணத்தோடு கூறி பதிவு செய்யுங்கள்.

பா.வெங்கடாசலம், நுங்கம்பாக்கம்

நான் வேட்பாளரை பார்த்து கேட்க விரும்பும் கேள்வி, இன்று நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலானவர்கள், குழந்தைகளின் கல்விக்காக, தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை செலவழிக்கின்றனர். இவர்களைப் பார்த்து ஏழைகளும் கடன் வாங்கி, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதி, பராமரிப்பு இல்லாமல் அரசுப் பள்ளிகள் இருப்பதால், ஏழைகள் கூட தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்க விரும்புவதில்லை.

அரசுப் பள்ளிகளின் சுற்றுப்புறங்கள் மலம் கழிக்கும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து, தூய்மையாகவும், சுகாதாரத்துடன் பராமரிக்கவும், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் போன்ற கல்விகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுப்பேன் என்று வேட்பாளர் கூறினால் நான் மகிழ்ச்சியடைவேன்.

மாலதி சம்பத்குமார், ராமாபுரம்

வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்டு வரும்போது, இந்த பகுதிக்காக இதுவரை என்னென்ன செய்துள்ளீர்கள் எனக் கேட்பேன். குறிப்பாக வெள்ளத்தின் போது என்ன செய்தீர்கள் எனக் கேட்பேன். அவர்கள் அரசாங்கத்தை மீறி எதுவும் செய்ய முடியாவிட்டாலும் தன்னார்வலர்களை வைத்தாவது ஏதேனும் உதவிகள் செய்திருந்தால் அவர்களுக்கு வாக்களிப்பேன்.

ஆர்.எம்.சண்முகநாதன், திருவள்ளூர்

என்னிடத்தில் வாக்கு கேட்டுவரக் கூடிய வேட்பாளர் எம்எல்ஏவாகி செய்வதை பிறகு பார்க்கலாம், முதலில் அவரிடம் பொது வாழ்க்கையில் பொதுமக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறீர்களா, உங்க ளுடைய சொந்தப் பணத்தில் செய்ய வேண்டும் என்பதில்லை. வசதி படைத்தவரிடம் வாங்கி 20 ஏழைகளுக்காவது கொடுத்திருப் பீர்களா என்று கேட்பேன். நான் கேட்பதன் நோக்கம், அடிப்படையில் பொதுச்சேவை செய்யக்கூடிய மனநிலை உடையவரா என் பதை அறிந்து கொள்வது தான். நல்லது செய் யவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தால்தான் கட்சி களை மீறி அவரால் நல்லது செய்ய முடியும். இதற்கு அவர் அளிக்கும் பதிலில் நான் திருப்தி அடைந்தால் அவருக்கே வாக்களிப்பேன்.

விஜயலெட்சுமி, செங்குன்றம்

ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர் மது அருந்தா தவரா என்று கேட்டு தெரிந்து கொண்ட பிறகே வாக்களிப்பேன். மதுப்பழக்கம் உள்ளவர்கள் இந்த நாட்டை ஆள முடியாது. அவர்களால் மதுவிலக்கும் கொண்டு வரமுடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. எனவே மதுப்பழக்கம் உள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். மதுப்பழக்கம் இல்லாதவருக்கே எனது வாக்கு.

பாலகணேஷ் சுயம்புலிங்கம், பெரும்புதூர்

நம்மைத் தேடி வரும் வேட்பாளரிடம் உறுதிமொழிச் சான்று கேட்பேன். சாதாரணமாக அரசு அலுவலகங்களில் ஜாதிச்சான்று, வருமானச்சான்று பெறும்போது நம்மிடம் உறுதிமொழி படிவம் வாங்குகின்றனர். அதில் தவறு நேரும் பட்சத்தில் நம்மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், 5 வருடம் எம்எல்ஏவாக இருப்பவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிவிடுகின்றனர். இதனைத் தடுக்க

`நான் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்' என கையொப்பமிட்டு, கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று வேட்பாளர்கள் உறுதிமொழிச்சான்று அளிப்பீர்களா எனக் கேட்பேன். அப்படி அளிப்பவருக்கே வாக்களிப்பேன்.

எந்தவொரு அரசு ஊழியரும் ஓய்வூதியப் பலன்களை எளிதில் பெறமுடிவதில்லை. சுமார் 30 ஆண்டுகள் பணிபுரிவோருக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும். அதிலும் தற்போதைய அரசு ஊழியர்களுக்கு அதுவும் கிடையாது. அப்படியிருக்கும் பட்சத்தில் 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருப்பவர்கள் எளிதில் ஓய்வூதியப் பலன்கள் பெறுகிறார்கள் என்பதால்தான் இதனையும் கேட்கிறேன்.

இமாம்ராசிக், கொளத்தூர்

வேட்பாளரிடம் நீங்கள் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு என்னென்ன செய்வீர்கள்? என்னென்ன அதிகாரங்கள் உங்களுக்கு உள்ளன? எனக் கேட்க விரும்புகிறேன். இதற்கு அவர் கூறும் பதிலைக் குறித்து வைத்துக்கொண்டு அவர் இவற்றை நிறைவேற்றுகிறாரா என கவனிப்பேன்.

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x