Published : 30 Apr 2016 10:55 AM
Last Updated : 30 Apr 2016 10:55 AM

வாக்காளர் வாய்ஸ்: கும்பிட்ட கரங்களுடன் வேட்பாளர்கள்!

இந்த வாரத்துக்கான தலைப்பு:

வேட்பாளர்கள் கும்பிட்ட கரங்களுடன் வீதி வீதியாக வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். உங்களைத் தேடி வரும், உங்கள் தொகுதி வேட்பாளர்களிடம் நீங்கள் முக்கியமாக என்ன கேள்வி கேட்பீர்கள். அதற்கு அவர் தரும் எந்த பதில் உங்களை திருப்திபடுத்தும். கேள்வியையும் பதிலையையும், ஏன் இந்த கேள்வி என்ற காரணத்தோடு கூறி பதிவு செய்யுங்கள்.

முனைவர்.கே.ஜி.பழனி, பள்ளிக்கரணை

1. சட்டப்பேரவைத் தொடர் நடைபெறு வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக தனது தொகுதிக்கு உட்பட்ட ஜாதி, மத, அரசியல் சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவையில் தொகுதி சார்பாகவும், பொதுவாகவும் பேச வேண்டியவை குறித்து விவாதிப்பீர்களா?

2. சட்டப்பேரவைத் தொடர் நடந்து முடிந்த பிறகு கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசியது? சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் எழுதியது போன்ற வற்றை துண்டு அறிக்கைகள் மற்றும் உள்ளூர் செய்தித்தாள்கள் வழியாக தொகுதி மக்களுக்கு தெரியப்படுத்துவீர்களா?

3. பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒவ்வொரு மானியக் கோரிக்கைக்கும் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மக்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுப்பீர்களா?

4. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தொகுதி வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றிய பணி என்ன என்பது குறித்தும், அவற்றின் நிலை என்ன என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வழங்குவீர்களா?

5. சட்டப்பேரவையில் வெளிநடப்பு, மேசை யைத் தட்டுதல் போன்றவற்றை மட்டும் செய்து கொண்டிருக்காமல், ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா?

6. ஊழல் செய்வதில்லை என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருக்காமல், ஊழல் பிரதிநிதிகளுக்கு துணை நிற்காமலும் அதனை வெளிப்படுத்தும் வகையிலும் செயல்படுவீர்களா?

இந்த 6 கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்று சொல்லக்கூடிய வேட்பாளருக்குத்தான் என் னுடைய வாக்கை அளிப்பேன். இதேபோல ஒவ்வொரு தொகுதி மக்களும் செயல்படு வார்களேயானால் நாளை வெற்றி பெறும் வேட்பாளர்கள் சட்டப்பேரவையில் நமது வளர்ச்சிக்காக செயல்படுவார்கள் என கருதுகிறேன்.

கிரிதரன், திருவேற்காடு

ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் மாதம் ஒருமுறை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏதேனும் அரசுப் பள்ளியில் வைத்து, பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பீர்களா எனவும், அவ்வாறு தொடர்ந்து 2 மாதங்கள் மக்களைச் சந்திக்காவிட்டால் தன்னை பதவி நீக்கம் செய்யலாம் என உறுதிமொழி பத்திரம் எழுதி மக்களிடம் தரும்படியும் கூற வேண்டும். அப்படிச் செய்தால்தான் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு அமை வதுடன், அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு ஏற் படவும் வழிவகை செய்யும்.

ஆர்.நேரு, புதுப்பெருங்களத்தூர்

நான் வேட்பாளரை பார்த்து கேட்க விரும்பும் கேள்விகள் “நாங்கள் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான பின்பு பொதுமக்கள் உங்களை எளிதில் அணுகும்படி இருப்பீர்களா, அல்லது பொது மக்களிடமிருந்து தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பீர்களா?. நீங்கள் சார்ந்திருக் கும் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற குரல் கொடுப்பீர்களா?. நீங்கள் ஆளும்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ எதுவானாலும் வாக்களித்த மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவீர்களா? சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைச் சந்திந்து பிரச்சி னைக்கு தீர்வு காண்பீர்களா? அல்லது மேஜையைத் தட்டிக் கொண்டே காலத்தை கழிப்பீர் களா?” இவை அனைத்துக்கும் வேட்பாளர் கூறும் பதிலைப் பொறுத்தே வாக்களிப்பேன்.

கவுதமன், கும்மிடிப்பூண்டி

வேட்பாளரிடம் ‘‘நீங்கள் எங்கள் பகுதிக்கு உள்கட்டமைப்பு வசதிகளாக என்னென்ன செய்து தருவீர்கள்? இலவசங்களை நிறுத்த உங்கள் கட்சி மேலிடத்தில் பேசுங்கள். கிராமப்புறமாக இருந்தாலும், நகர்ப்புறமாக இருந்தாலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். இலவசங்களை கொடுத்து விட்டு எங்களை வறுமையில் நிறுத்தக் கூடாது” என்பேன்.

ஈஸ்வரன், சென்னை

எங்கள் தொகுதி வேட்பாளரிடம் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி, தற்போதைக்கு காவல்துறையில் பென்சன் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. பதவி உயர்வு, ஊதிய முரண்பாடு போன்று நிறைய பிரச்சினைகள் உள்ளன. இவைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் எனக் கூறினால் மகிழ்ச்சியடைவேன்.

காவல்துறையில் உள்ள பிரச்சினைகள் களையப்பட வேண்டுமென்றால் சங்கம் வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது என்பதால் இப்பிரச்சினைகளுக்கு சட்டப் பேரவை மூலமாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும். இவர்கள் குரல் கொடுத்தால்தான் ஒரு லட்சம் குடும்பங்கள் நன்றாக வாழ முடியும். எனவேதான் இப்பிரச்சினை குறித்த கேள்வியை கேட்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கேள்வி வெளியாகும். அதற்கு நீங்கள் பதிவு செய்யும் யோசனைகள் அடுத்த சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். அடுத்த வாரத்துக்கான கேள்வி நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

அதற்கான உங்கள் யோசனைகளை கருத்துக்களை ஞாயிறு முதல் வெள்ளி வரை 044-42890002 எண்ணில் நீங்கள் பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x