Published : 26 Sep 2015 09:04 AM
Last Updated : 26 Sep 2015 09:04 AM

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு: பெங்களூரு - மைசூரு சாலையில் மறியல்

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணை களில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக (14 ஆயிரம் கன அடி) நீர் திறக்கப்பட்டுள்ளது.

மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப் படி 103.36 அடி (மொத்த கொள்ள ளவு 124.80 அடி) நீர் இருப்பு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் இருந்து அணைக்கு வினாடிக்கு 6,808 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 16 கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைய ஆரம்பித்திருப்ப தால் கர்நாடக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீரங்கப் பட்டிணம், மத்தூர், கெஜ்ஜலக் கெரே ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதே போல கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப் பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை கண்டித்து விவசாய சங்கத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நீர்வளத்துறையை முற்றுகையிட்டனர். கன்னட ரக் ஷன வேதிகே, நவநிர்மான் சேனா ஆகிய கன்னட அமைப்பினரும் கபினி அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x