யோகா என்னும் உலகம் - 1

யோகா என்னும் உலகம் - 1
Updated on
2 min read

யோகம் என்பது என்ன?

‘அவனுக்கு அடித்தது யோகம்’ என்பார்கள். ‘யோகம் கைகூடி வருகி றது’ என்பார்கள். இங்கு யோகம் என்பது அதிர்ஷ்டம் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. சித்தயோகம், அமிர்தயோகம் என்று காலண்டரில் பார்த்திருப்பீர்கள். இவை தவிர, இன்றைய நவீன உலகில் லாஃபிங் யோகா, ஸ்லீப்பிங் யோகா என்று யோகங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. இவ்வாறு நம் அன்றாட வாழ்வில் யோகம் என்ற சொல் பல்வேறு காலங்களில், பல்வேறு முறைகளில் பயன்பட்டுவருகிறது.

ஆசனங்கள் மட்டுமே யோகமா?

யோகம் என்ற பதம் பல்வேறு பொருள்களைக் கொண்டது; ஆழ மாகச் செல்லச் செல்ல, அநேக அர்த்தங்களைத் தரக்கூடியது - ஆன்மாவைப் போல.

பொதுவாக, எதையும் ஆராய் பவர்கள், எளிதில் உணர்ச்சிவசப் படுபவர்கள், எதையும் மனதால் பார்ப்பவர்கள், செயல்புரிபவர்கள் என்று 4 வகை மனிதர்கள் உள்ள னர். அவர்களுக்குத் தக்கபடி யோகங்கள் 4 வகையாகப் பிரிக் கப்பட்டுள்ளன.

காரியங்களை சுயநலமின்றி பொது நலத்துக்காகச் செய்தால் அது கர்ம யோகம்.

யோக: சித்த வ்ருத்தி நிரோத:

அதாவது, யோகமானது சித்தத்தில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப் படுத்துவது என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.

யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத:

அதாவது, வாக்கைக் கட்டுப்படுத்துவது யோகத்தின் முதல் நிலை என்கிறார் ஆதிசங்கரர் தமது விவேக சூடாமணியில்.

நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒருசேரத் திரட்டி, ஓர் இஷ்ட தெய்வத்திடம் குவித்து, அவருக்காகவே நம் ஐம்புலன்களின் காரியங்களைத் திருப்புவதே பக்தி யோகம்.

நாம் நமது உடல்ரீதி யான, மன ரீதியான, புத்தி ரீதியான வாழ்க்கையை மட்டும், அவை தரும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பற்றிக்கொண்டு மட்டும் வாழ்ந்தால் போதுமா?

அதற்கு மேல் அல்லது அதன் அடி ஆழத்தில் உள்ள ஞானப் பெட்ட கமாக உள்ள நம் உண்மை நிலையை - சைதன்ய நிலையை அறிய வைப்பது ஞான யோகம்.

அந்த உண்மை நிலையை உடல் தவம், மனத் தவம் செய்து மூச்சுக் காற்றான பிராணனை அடக்கி அதன்மூலம் ஆன்மாதான் நாம் என்பதை உணர்த்துவது ராஜ யோகம்.

இணைவதே யோகம்

யோகம் என்ற பதம் ‘யுஜ்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வருவது. யுஜ் என்றால் இணைவது. மனிதன் எவற்றோடு இணைய வேண்டும் என்பதில்தான் அடிப்படை ஆன்மி கம் உள்ளது.

இன்றைய மனிதன் பிளவுபட்டு, சிதறுண்டு, ஒற்றுமையின்றி வேறுபட்டு இருக்கிறான். மீண்டும் அவன் ஒன்றுபட வேண்டும். யாருடன்? எதனுடன்?

மனிதன் முதலில் தனக்குத் தானே இணக்கமாக இருக்க வேண் டும். அவனது அறிவு ஒன்று கூற, மனது வேறொன்றைச் செய்ய வைக்கும்போதுதான் அவன் தவறு களைச் செய்கிறான். தான் செய்வது தான் சரி என்று வாதாடுகிறான்.

அப்படிப்பட்ட மனிதன், தானே தனக்கு எதிரியாக, ஆன்மிக வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான். ‘‘தானே தனக்கு நண்பன், தானே தனக்கு எதிரி’’ என்று கீதை கூறுவது இதைத்தான்.

அடுத்து, மற்ற மனிதர்களிடமும் இயற்கையுடனும் மனிதன் இணக் கமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வாழ்க்கையில் எந்த உயர் நோக்கமும் இல்லாதவனாக, தனக்குத் தானே ஒரு சுமையாக இருந்து மறைகிறான் மனிதன். சுயநலவாதியாகிப் பூமிக்குப் பாரமாகிறான். பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கருத்து இல்லாமல் சீரழிகிறான்.

நன்மை செய்; நல்லவனாக இரு. இதுவே சமய வாழ்வின் சாரம் என்பார் சுவாமி விவேகானந்தர். இப்படி வாழ்வதற்குத்தான் கர்ம யோகம் அவசியமாகிறது. மற்ற யோகங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

(சுவாமி விமூர்த்தானந்தர் - சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர்)

- நாளையும் யோகம் வரும்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in