Last Updated : 27 Aug, 2017 06:10 PM

 

Published : 27 Aug 2017 06:10 PM
Last Updated : 27 Aug 2017 06:10 PM

தான்சானியாவில் 3,20,000 அகதிகளுக்கு உணவளிக்க ஐ.நா. அழைப்பு

தான்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3,20,000 அகதிகளுக்கு உணவளிக்க உலக நாடுகளிடம் ஐ.நா. உதவி கோரியுள்ளது.

நிதிஉதவிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் விளைவாக வடமேற்கு தான்சானியாவில் வாழும் 3,20,000 அகதிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

டபிள்யூஎஃப்பி (உலக உணவுத் திட்டம்) இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

அகதிகளின் உணவு மற்றும் சத்துணவுத் தேவையை அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரும் டிசம்பருக்குள் 23.6 மில்லியன் டாலர் (1 டாலர் 63 ரூபாய் எனக் கணக்கிட்டால் ரூ.134.30 கோடி) பணம் தேவைப்படுகிறது. இந்த அகதிகள் பெரும்பாலும் புருண்டி மற்றும் காங்கோவிலிருந்து வந்தவர்கள்.

தான்சானியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மைக்கேல் டன்ஃபோர்டு இது பற்றிக் கூறுகையில், நன்கொடையாளர்கள் இதற்கு உடனடியாக உதவிசெய்யவில்லையெனில் அகதிகளுக்கு வழங்கப்படும் உணவு ரேஷன் அளவு குறைக்கவேண்டிய அவசிய நிலை ஏற்படும் என்றார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் அளவே குறைக்கப்பட்டுள்ளதாக டபிள்யூஎஃப்பி தெரிவிக்கிறது. பரிந்துரைக்கப்பட்டுள்ள தினசரி உட்கொள்ள வேண்டிய 2,100 கிலோ கலோரிகளில் இப்போதே 62 சதவீதம் மட்டுமே அவர்களுக்கு வழங்கிவரும் நிலை உள்ளது என்கிறது டபிள்யூஎஃப்பியின் அறிக்கை.

2 மில்லியன் தெற்கு சூடான் அகதிகள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அவர்களுக்காக உலக நாடுகளிடம் ஐ.நா. சபை ஏற்கெனவே உதவி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x