Last Updated : 25 Aug, 2017 11:26 AM

 

Published : 25 Aug 2017 11:26 AM
Last Updated : 25 Aug 2017 11:26 AM

மாசு ஏற்படுத்தாத இயற்கை வண்ணம்: சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்

விநாயக சதுர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அப்பண்டிகையை ஒட்டிய டீஸர், டிரைலர்களான களிமண் பிள்ளையார் சிலைகள், குடைகள் ஆகியவை கடந்த ஒரு வாரமாகவே நாம் கடந்து வந்திருப்போம்.

இதுமட்டுமா நமக்கு விநாயகர் சதுர்த்தி என்றால் நினைவுக்கு வரும், ஃபேபிரிக் வண்ணத்தால் வண்ணமிடப்படும் களிமண் விநாயக சிலைகளை கடலில் கரைப்பதால் அதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளும், சூழலை தூய்மையாக வைத்திருக்க அவர்கள் வழங்கும் ஆலோசனைகளும் கூடவே நினைவுக்கு வரும் அல்லவா?

ஆனால் இம்முறை சற்று வித்தியாசப்பட்டு இருக்கிறது, ஆம் சூழல் பற்றிய பாதுகாப்பு உணர்வு, சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடத்தில் மட்டுமில்லாது பொதுமக்களிடமும் பரவலாக காணப்பட துவங்கியுள்ளது என்கிறார் ஓவியரும், கலை வடிவமைப்பாளருமான ஏகன் ஏகாம்பரம்.

பண்டைய கால ஓவியங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆய்வு மாணவரான ஏகன் தற்போது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இயற்கை வண்ணங்களால் ஆன விநாயகர் சிலைகளுக்கு உயிர் ஊட்டி வருகிறார்.

காளஹஸ்தி கோயில்

இதோ ஏகனே இயற்கை வண்ணங்கள் குறித்த மக்களின் பார்வை விசாலமாகியுள்ளதை நம்மிடம் விவரிக்கிறார், “காளஹஸ்தி கோயிலில் உள்ள ஓவியங்கள் பல கலம்காரி பாணியில் தீட்டப்பட்ட ஓவியங்கள். ஆகவே இங்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் இயற்கை வண்ணங்களால் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதற்காக சென்னையில் இருக்கும் எனக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பை எனது ஆய்வுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன்.

இந்த விநாயகர் சிலைகளை வடிவமைத்த சிற்பியின் பெயர் ஜலகண்டேஸ்வரர். ஃபைன் ஆர்ட்ஸில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.மேலும் அவர் பாரம்பரியமாக பானைகள் வனையும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவ்வாறான கூட்டணியில்தான் நாங்கள் இந்த சிலைகளை உருவாக்கியுள்ளோம்.

இயற்கை வண்ணங்கள்

முழுக்க முழுக்க இந்த இந்த விநாயகர் சிலைகள் இயற்கை வண்ணங்களால் மட்டுமே தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் கடுக்காய், கற்றாழை, இயற்கை மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை வண்ணங்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.

உதாரணத்துக்கு விநாயகரின் உருவத்துக்கு வண்ணமிட சோழர்காலத்தில் பயன்படுத்திய கனிமத்தைதான் பயப்படுத்தியுள்ளேன்.

இதற்கு சற்று நேரம் கூடுதலாகத் தேவைப்படும். ஆனால் மதிப்பான பொருளை உருவாக்க நீண்ட நேரத்தை செலவிடுவதில் தவறில்லையே?

பாரம்பரியம்

விநாயக சதுர்த்தி நமது பாரம்பரிய பண்டிகை அதற்கேற்றாற் போல் அதனை நமது பாரம்பரிய பாணியில் கொண்டாட வேண்டும் அல்லவா? அதற்கான ஆர்வமும் மக்களிடம் உள்ளதை நாங்கள் காண்கிறோம்.

பணம் குறைவு, நேரம் மிச்சம் காரணமாக ஃபேபிரிக் வண்ணத்தால் தீட்டப்படும் விநாயகர் சிலைகள் சந்தைக்கு அதிகமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இத்தகைய விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதன் மூலம் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

மாசு ஏற்படுத்தாது

நாங்கள் பயன்படுத்தும் இயற்கை வண்ணங்களால் மாசு ஏற்படுத்தாது. சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் என்ன எங்களைப் போன்றவர்கள் அங்கொன்று இங்கொன்றுமாக இருப்பதால பல நேரங்களில் மறைக்கப்பட்டு விடுகிறோம்.

ஆனால் இதற்கிடையிலும் பழமையை நேசிக்கும் மக்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் தொடர்ந்து எங்களை அடையாளப்படுத்தி உற்சாகப்படுத்தி வருகிறார்கள்” என்று விடை பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x