Last Updated : 25 Jul, 2017 09:28 AM

 

Published : 25 Jul 2017 09:28 AM
Last Updated : 25 Jul 2017 09:28 AM

சென்னையில் வருமான வரி வசூல் ரூ.8,591 கோடியாக குறைந்தது: அதிகாரிகள் விசாரணை தொடங்கியது

சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வருமான வரி வசூல் குறைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வருமான வரி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் ரூ.44 ஆயிரம் கோடியும், 2016-ம் ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடியும் வருமான வரி வசூலானது. 2017-ம் ஆண்டில் ரூ.59 ஆயிரம் கோடி வரை வசூலாகும் என்று கணக்கிட்டோம். ஆனால், ரூ.60 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. மக்களின் பொருளாதார வளர்ச்சி யும், விழிப்புணர்வும் அதிகரித் திருப்பதே இதற்கு காரணம்.

ஆனால், இதற்கு நேர்மாறாக சென்னை நகரம் உள்ளது. மெட்ரோ நகரங்களான மும்பையில் இந்த ஆண்டு ரூ.29 ஆயிரம் கோடியும், டெல்லியில் ரூ.11 ஆயிரம் கோடியும், பெங்களூருவில் ரூ.14 ஆயிரம் கோடியும் வருமான வரி வசூலாகியுள்ளது. அனைத்து நகரங்களிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வருமான வரி வசூல் அதிகரித்துள்ளது. ஆனால், சென்னையில் சுமார் ரூ.400 கோடிக்கு வசூல் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.8,986 கோடி வசூலான நிலையில், இந்த ஆண்டு ரூ.8,591 கோடியாக குறைந்துவிட்டது.

தமிழக அளவில் வருமான வரி வசூல் அதிகமானாலும், தலைநகரான சென்னையில் கடந்த ஆண்டை விடவும் குறைவான தொகையே வசூலாகியுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தனியாக விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு வரி செலுத்தியவர்களின் பட்டியலையும், இந்த ஆண்டு செலுத்தியவர்களின் பட்டியலையும் வைத்து ஆய்வு நடத்தி வருகிறோம். இந்த ஆய்வுக்கு பின்னரே சில அதிரடி சோதனைகளை தற்போது சென்னையில் நடத்தி வருகிறோம்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு வருமான வரி வசூல் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2017-18ம் ஆண்டில் ரூ.71 ஆயிரம் கோடி வருமான வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். மாத வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ள வர்கள் வரும் 31-ம் தேதிக்குள் வருமான வரித் துறையில் ரிட்டன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். http://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையதளம் மூலம் ரிட்டன் கணக்கு தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் 75 சதவீதம் பேர் ஆன்லைனில்தான் ரிட்டன் தாக்கல் செய்கின்றனர்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x