Published : 01 Jul 2017 10:55 AM
Last Updated : 01 Jul 2017 10:55 AM

பார்வை ஒன்றே போதுமா..?- நம்பிக்கை கீற்று ரிஷிகேசவன்

தோற்றத்தால் குறையுள்ள ஒவ்வொரு மனிதருக் குள்ளும் மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும் என்பார்கள். அப்படியொரு தனித் திறமைக்கு சொந்தக்காரர் ரிஷிகேசவன்.

நிழலாய் நின்ற மகேஸ்வரி

ஐம்பது வயதைக் கடக்கும் ரிஷிகேசவன் மேட்டூர்வாசி. 1997-ல் தூத்துக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, கொதிகலன் வெடித்த விபத்தில் இவரது பார்வை பறிபோனது. அதுவரை இவரை தூக்கிவைத்து கொண்டாடிய அந்த நிறுவனம், பார்வை போனதும் பரிகாசம் செய்தது. உறவினர்கள், நண்பர்கள் என அத்தனை முகங்களும் தன் சுயமுகத்தைக் காட்ட, உடன் பணிபுரிந்த மகேஸ்வரி மட்டுமே ரிஷிகேசவனுக்கு நிழலாய் நின்றார். அதுவே காதலாய் மலர, அந்த ஆண்டே மகேஸ்வரியை மணம் முடித்தார் கேசவன். தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களால் மனச் சோர்வடைந்து கிடந்த கேசவனுக்கு மன தைரியம் கொடுத்து மெல்ல மெல்ல உயரத்துக்கு உயர்த்தினார் மகேஸ்வரி.

அதை நம்மிடம் விவரித்த ரிஷிகேசவன், ‘‘வாழ்க்கையே சூனியமாகிவிட்டதோ என நான் நினைத்திருந்த நேரத்தில் ‘உங்களுக்கு என்ன குறைச்சல்.. நம்மை உதாசீனம் செய்தவர்கள் நம்மைப் பார்த்து மூக்கில் விரல் வைக்கும்படி நாம் வாழ்ந்து காட்டுவோம். உங்களுக்கிருக்கும் திறமையைக் கொண்டு, எளிய முறையில் கணிதம் கற்பித்தல், நினைவாற்றலை அதிகரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிப் போம். வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் இந்த சேவையை நாம் கொடுக்க லாம்’னு மகேஸ்வரி தான் எனக்கு யோசனை சொன்னார்’’ என்கிறார்.

மனைவி சொல்லே மந்திரம்

மனைவியின் அடிதொட்டு நம்பிக்கைப் பயணத்தைத் தொடங்கிய ரிஷிகேசவன், கணினி மூலம் ‘டெக்ஸ்ட் டு ஸ்பீச்’ முறையில் நினை வாற்றலை அதிகரிக்கும் உலகின் தலை சிறந்த நூல்களையும், சுய முன்னேற்றப் பயிற்சிகள் தொடர்பான நூல்களையும் படித்தார். நினை வாற்றலை அதிகரிப்பதற்கான கடும் பயிற்சி களையும் மேற்கொண்டார். இப்படி தன்னை பக்குவப்படுத்திக் கொண்டதும், 2007-ல் தனியாக ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கி, நினைவாற்றல் மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார் ரிஷிகேசவன்.

கடந்த 10 ஆண்டுகளில்..

அதன் பிறகு தான் கடந்துவந்த பாதையை விவரித்த ரிஷிகேசவன், ’’கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம், கேரளம், கர்நாடகம், மேகாலயா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நினைவாற்றல் மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சி களை அளித்துள்ளேன். கடந்த மே மாதம் மேகாலயா போலீஸ் அதிகாரி களுக்கு நினைவாற்றல் மற்றும் உத்வேக பயிற்சிகளை அளித்தேன்.

பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ’மூன்றாவது கண்’ எனும் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்தி வரு கிறோம். ஒலி மூலம் பார்வையை உணரும் பிரத்யேக மென்பொருள் தொழில் நுட்பம் கொண்டு, பார்வை இழந்தவர்கள் படிக்கவும் பயிற்சி பெறவும் உதவிகளைச் செய்துவருகிறோம்.

இவைகளைத் தவிர, எனது மகள் கீர்த்தனா பெயரில் செயல்படும் அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் பத்துக்கும் குறையாத ஏழை மாணவர்களின் கல்லூரிப் படிப்புக்கு உதவுகிறோம். அவ்வப்போது கண் சிகிச்சை, மருத்துவ முகாம்களையும் நடத்தி வரும் கீர்த்தனா அறக்கட்டளை, ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்கும் முடிந்தவரை உதவி வருகிறது.’’ என்று சொன்னார்.

எதிர்கால பயணம்

தொடர்ந்து, தனது எதிர்கால பயணம் குறித்துப் பேசுகையில், “மாற்றுத் திறனாளிகள் தொழில் பயிற்சி பெறுவதற்காக தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது எனக்குள் இருக்கும் கனவு. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், போதிக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவாற்றல் மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சிகளை இலவசமாகவே வழங்க திட்டமிட்டுள்ளேன். கல்வியில் பின்தங்கிய பள்ளிகளை என்னிடம் ஒப்படைத்தால் ஒரே ஆண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து அவர்களது திறமையை மேம்படுத்திக் காட்ட முடியும்’’ என்று உறுதிபடச் சொன்னார் ரிஷிகேசவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x