Published : 27 Jan 2014 07:10 PM
Last Updated : 27 Jan 2014 07:10 PM

திருச்சி: குடியரசு தினத்திற்கு அரசியல் கட்சிகள் கொடுத்த ‘மரியாதை

குடியரசு தினக் கொண்டாட்டம் தேசப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வுமட்டுமல்ல தேசியத் திருவிழாவும்கூட. நமது நாட்டில் சுதந்திரம், குடியரசு பெற்றதன் பலனை அதிகமாகவே அனுபவித்து வரும் முக்கியமான அரசியல் கட்சிகள் அந்த தினத்திற்கு கொடுத்த மரியாதை கவலையளிக்கும் விதமாக இருக்கிறது.

திருச்சியில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் கொடியேற்றிய இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, எம்.பி, மாநகர மேயர், துணை மேயர், மாநகர் மன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட வரவில்லை. விதிவிலக்காக மாவட்ட ஊராட்சித் தலைவரான இந்திராகாந்தி மட்டும் கலந்துகொண்டார்.

மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கொடியேற்றினாலும், ஆட்சியர் கலந்துகொள்ளும் விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக அந்த மரபும் பின்பற்றப்படுவதில்லை.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் சென்னையில் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றதால் இங்கு நடைபெற்ற நிகழ்சிக்கு அவர்கள் வரவில்லை என காரணம் சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் (தி.முக, தே.மு.தி.கவினர்) உள்ளூரிலேயே இருந்துகொண்டு கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததை என்னவென்று சொல்வது?

திருச்சி தில்லை நகரில் உள்ள அ.தி.மு.க மாநகர் மாவட்ட அலுவலகம், கரூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயம், குடமுருட்டி பகுதியில் உள்ள ம.தி.மு.க அலுவலகம், ஜங்சன் ராக்கின்ஸ் ரோட்டில் அமைந்துள்ள மாநகர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகம், கரூர் புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம், மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், பா.ம.க அலுவலகம், பா.ஜ.க அலுவலகம் ஆகிய பெரிய கட்சிகளின் அலுவலகங்கள் எதிலும் தேசியக் கொடியேற்றப்படவில்லை.

காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னமும் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறது. புதிய, சிறிய கட்சியான சமத்துவ மக்கள் கட்சிகூட குடியரசு தின விழாவை காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடியது. தேசப்பற்றாளர்கள் என பறைசாற்றிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்கூட குடியரசு தினத்தன்று கொடியேற்றப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது.

சாமான்ய பொதுஜனத்தைவிட சுதந்திரம் மற்றும் குடியரசின் பலன்களை அதிகம் அனுபவிக்கும் அரசியல் கட்சிகளும் அக்கட்சி பிரபலங்களும் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதான்.

அதேசமயம் கிராமம், நகரம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நல அமைப்புகள், கட்சி சார்பற்ற இளைஞர் சங்கங்கள், தங்களை தேசபக்தர்கள் என பறைசாற்றிக்கொள்ளாத சாமான்ய மக்கள் பலர் உண்மையான தேசபக்தியுடன் ஆங்காங்கே கொடியேற்றிக் கொண்டாடி தேசப்பற்றை வெளிப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

இதுகுறித்து ஒரு அரசியல் விமர்சகர் கூறும்போது, “பல அரசியல் கட்சிகள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியைப் பறக்கவிடுவதால் அந்தக்கொடியின் புனிதம் கெட்டுப்போய்விடும் எனக் கருதுவதால் கூட கொடியேற்றாமலிருப்பதை வழக்கமாக வைத்திருக்கலாம் அல்லவா?” என்றார். அவர் சொல்வதும் வாஸ்தவம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x