Last Updated : 12 Feb, 2014 12:00 AM

 

Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

அசோக்நகரில் 7 முக்கிய சாலைகள் ரூ. 79.5 கோடியில் நவீனமயமாகிறது

அசோக் நகரில் உள்ள 7 முக்கிய சாலைகள், ரூ.79.5 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் உலகத் தரம் வாய்ந்த சாலைகளாக மாற்றப்பட உள்ளன. வரும் 24-ம் தேதிக்குள் அதற்கான டெண்டர்கள் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த 30 சாலைகளை ரூ.300 கோடியில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக அசோக் நகர் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சாலை, அசோக் நகர் 1,4 மற்றும் 11-வது நிழற்சாலைகள் உள்பட 11 முக்கிய சாலைகளை உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மொத்தம் 3.21 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலைகளுக்காக அரசு ரூ.79.5 கோடியை ஒதுக்கியுள்ளது. சாலைகளில் உள்ள பல்வேறு குழாய்களை மாற்றியமைக்க ரூ.17.7 கோடியும், கேபிள்களை அகற்ற ரூ.6.5 கோடியும், சாலை, தெரு விளக்கு, பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.51.3 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதசாரிகள் சிரமமின்றி செல்ல சரியான அளவில் நடைபாதைகள், வாகனங்கள் இடையூறின்றி செல்ல தரமான சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், சென்டர் மீடியன், சாலை முழுவதும் சீரான அளவில் வெளிச்சம் தரக்கூடிய தெரு விளக்குகள் போன்றவை உலகத் தரத்தில் அமைக்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டெண்டர் முடிவு செய்யப்பட்டு பத்து மாதங்களில் சாலைகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தப் பணிகள் முடிக்க மின் வாரியம், சென்னைக் குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பும் வேண்டியிருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x