Last Updated : 20 Nov, 2013 11:00 AM

 

Published : 20 Nov 2013 11:00 AM
Last Updated : 20 Nov 2013 11:00 AM

சென்னை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மார்ச் மாதத்தில் திறக்க அரசு திட்டம்

புதிய தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு 500 படுக்கைகள், 20 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள், உயர்தர மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டிடம், டெல்லியில் உள்ள விஞ்ஞான மருத்துவக் கழகத்துக்கு (எய்ம்ஸ்) இணையான அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு சாதகமாக இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரவு, பகலாக பணிகள் தீவிரம்

அதைத்தொடர்ந்து புதிய தலைமைச் செயலகத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றும் பணி

தொடங்கியது. இதற்கான வடிவமைப்பை தமிழக பொதுப்பணித் துறை பொறியாளர்

களே உருவாக்கினர். இப்பணியை மேற்கொள்வதற்காக ரூ.26.92 கோடியை அரசு ஒதுக்கியது. அப்போதிருந்தே பணிகள் வேகமெடுத்தன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்கும் பணியில் 200 தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

20 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள்

கட்டிடத்தை முழுமையாக மாற்றாமல், உள்கட்டமைப்புகள் மட்டும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு தகுந்த வகையில் புதுப்பிக்கப்படுகிறது. இங்கு 16 அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்களும், 4 சிறிய ஆபரேஷன் தியேட்டர்களும் கட்டப்பட்டுள்ளன. 500 படுக்கைகளுடன் பிரமாண்டமாக தயாராகும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமனையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 200 கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

கலந்தாய்வுக் கூடம்

புதிதாக 2 சாய்தளப் பாதைகள், ஆய்வகங்கள், நூலகம், படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு ஆக்ஸிஜன் வாயு எடுத்துச் செல்லும் குழாய்கள் அமைத்தல், மருத்துவமனை நிர்வாகக் கட்டிடம், தானியங்கி சலவை செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகிய பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இந்தப் பணிகள் ஒவ்வொன்றாக முடிந்ததும் அங்கு உடனுக்குடன் மருத்துவ உபகரணங்களைப் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. புதிய தலைமைச் செயலகத்தில் இருந்த சட்டப்பேரவை மற்றும் மேல்-சபை அரங்குகள் கலந்தாய்வுக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

24 மணி நேர தண்ணீர் வசதி

கட்டிடத்தின் மொட்டை மாடியில் புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்படுகிறது. ஆபரேஷன் தியேட்டர்களுக்கு 24 மணி நேரமும் தங்குதடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதற்காக இந்த நீர்த்தேக்கத் தொட்டி பிரத்யேகமாக கட்டப்படுகிறது.

மருத்துவமனையில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், மருத்துவ உபகரணங்கள் முழுவதுமாக பொருத்தி இயக்கிப் பார்க்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x