Published : 21 Apr 2014 12:00 AM
Last Updated : 21 Apr 2014 12:00 AM

திருவண்ணாமலை: பிளாஸ்டிக் நாற்காலி வருகையால் வாழ்வாதாரம் பறிபோனது: மாற்றுத் திறனாளிகள் வேதனை

“பிளாஸ்டிக் நாற்காலிகள் வருகையால் எங்களது வாழ்வாதாரம் பறி போய்விட்டது” என்று நாற்காலிகளுக்கு வயர் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மர நாற்காலிகளுக்கு, வயர் பின்னும் பணியில் பார்வையற்ற 3 பேர், ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை அன்னை அஞ்சுகம் நகர் தேவேந்திரன் (43), விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அத்தியூர் கிராமம் தர்மலிங்கம் (42), கண்டாச்சிபுரம் தண்டபாணி (37) ஆகியோர் இரவு பகல் பாராமல், தங்கள் பணியை செவ்வனே செய்து வருகின்றனர்.

அவர்களில், தேவேந்திரன் மட்டும், திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியில் உள்ளார். மற்ற இருவரும் கூலித் தொழிலாளர்கள்.

அவர்கள் கூறுகையில், “ஒரு நாற்காலிக்கு வயர் பின்னுவதற்கு ஒரு நாளாகும். தனியார் என்றால் ரூ.500 வரை கிடைக்கும். வயர் செலவு எங்களுடையது. ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.100 தருவதாக கூறியுள்ளனர். அவர்கள், வயர் வாங்கி கொடுத்துள்ளனர். 18 ஆண்டுகளாக நாற்காலிகளுக்கு வயர் பின்னி வருகிறோம். அப்போது, ஒரு நாற்காலிக்கு ரூ.40 கூலி வாங்கினோம். வயர் விலை ஒரு கிலோ ரூ.12. ஆனால், இப்போது வயர் விலை ஒரு கிலோ ரூ.240. வயர் விலை 20 மடங்கு உயர்ந்துவிட்டது. எங்கள் கூலி மட்டும் இரண்டரை மடங்குதான் உயர்ந்துள்ளது.

பிளாஸ்டிக் நாற்காலி வருகை யால் எங்களது வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. வயர் நாற் காலியை மக்கள் விரும்புவது கிடையாது. அரசு அலுவலகங்களில் முழுமையாக வயர் நாற்காலியை பயன்படுத்தினால், எங்களுக்கு பிழைப்பு கிடைக்கும். பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று கூறும் அரசாங்கம், பிளாஸ்டிக் நாற்காலியை ஏன்? பயன்படுத்த வேண்டும்.

250 வயர் நாற்காலிகள் உள்ள அரசு அலுவலகத்துக்கு, ஒரு முழுநேர பணியாளரை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் யாரும் நடைமுறைப்படுத்துவது கிடையாது. ஒரு தாலுகாவுக்கு 2 பார்வையற்றவர்களை நாற்காலிக்கு வயர் பின்னுவதற்கு நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும். அந்த தாலுகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இப்போது மாவட்டத்துக்கு ஒருவர் என்று 27 பேர் பணியில் உள்ளனர்.

மத்திய அரசு, ஒரு துறைக்கு ஒரு பார்வையற்றவரை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. அதன்படி, புதுச்சேரியில் ஒரு துறைக்கு ஒருவர் என்று 17 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கு ரூ.22 ஆயிரம் மாத ஊதியம் கிடைக்கிறது. அதேபோன்று, தமிழகத்திலும் மாவட்ட அளவில் ஒரு துறைக்கு ஒருவரை நியமிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் நாற்காலிகளுக்கு வயர் பின்னும் பணியில் பார்வையற்றவர்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசாணை உள்ளது. அதனை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் பல வட்டங்களில் பின்பற்றுவது கிடையாது.

நல்ல நிலையில் இருப்பவர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். பார்வையற்றவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று தனியார் விரும்புகின்றனர். எங்களது வேலை சிறப்பாக இருக்கும். எந்த குறையும் இருக்காது. பிழைப்பு இல்லாத நாட்களில் மிகுந்த கஷ்டமாக இருக்கும்” என்றனர்.

“இறைவன் கொடுத்த அனைத்து உடல் உறுப்புகளும் நல்ல நிலையில் இருந்தாலும், மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்கள் வாழும் காலத்தில், இறைவன் பறித்துக்கொண்ட பார்வையைப் பற்றி கவலைப்படாமல் மனித குலத்துக்கு எடுத்துக்காட்டாய் வாழும் உழைப்பாளிகளின் உழைப்புக்கு முக்கியத்துவமில்லை”. இந்த மனகுமறலுடன், அவர்களது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x