Published : 22 Jan 2014 06:40 PM
Last Updated : 22 Jan 2014 06:40 PM

உதகை: ரசாயன புகையால் அவதியுறும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிக்குட்பட்ட வெலிங்டன் கன்டோண்மென்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளின்கீழ், முறையாக குப்பை அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெலிங்டன் ராணுவ மையத்தையொட்டி, கன்டோண்மென்ட் வாரியத்துக்குட்பட்ட வெலிங்டன் பஜார், பாபு வில்லேஜ், நல்லப்பன் தெரு, சின்ன வண்டிச்சோலை, சிங்காரதோப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. வாரியத்துக்குட்பட்ட 7 வார்டுகளில் 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் 2 டன் கழிவுகள், வெலிங்டன் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தையொட்டியுள்ள குப்பைக் குழியில் கொட்டப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பையாகப் பிரித்து மண்புழு உரம் தயாரிக்க, 2006-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்துக்குட்பட்ட 7 வார்டுகளிலுள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் குப்பைகளைப் பிரித்துப் போட தொட்டிகள் வழங்கப்பட்டன. இதில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தனியார் மூலமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

டெண்டர் ரத்து

இந் நிலையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர், திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாமலும், குப்பையை அகற்றாமலும் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து 2009-ம் ஆண்டு குப்பை சேகரிப்புப் பணி, தோட்டப் பராமரிப்பு பணிகளை கன்டோண்மென்ட் நிர்வாகம் பிரித்து, குப்பை சேகரிப்புப் பணியை வேறு ஒப்பந்ததாரருக்கு வழங்க முடிவு செய்தது.

இந்நிலையில் ஏற்கெனவே இப்பணியை செய்து வந்த ஒப்பந்ததாரர், குப்பைகளை பிரிக்காமல் குப்பைக் குழியில் கொட்டி வந்தார். இதனால் இவரது ஒப்பந்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.

சுகாதார சீர்கேடு

தற்போது குப்பையை சேகரிக்கும் நகராட்சி ஊழியர்கள், பிரிக்காமல் அப்படியே குழியில் கொட்டி விடுகின்றனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அப்படியே தங்குவதால், அதை எரிக்கும்போது ரசாயன புகை வெளியேறுகிறது. குப்பைக் குழியையொட்டி கோதுமை ஆராய்ச்சி மையம் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளன. ரசாயன புகை வெளியேறுவதால் மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் சுவாச கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர். இந்தக் கழிவுகளை உண்ண கால்நடைகள் முகாமிடுவதால், அப்பகுதியில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

மறு ஏலம் விட முடிவு

இதுகுறித்து வாரிய துணைத் தலைவர் வினோத்குமாரிடம் கேட்டபோது, ‘திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர், முறையாக பணியை மேற்கொள்ளாததால் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உரம் தயாரிப்பு, தோட்ட பராமரிப்பு ஆகியவற்றை பிரித்து இரு நபர்களுக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் டெண்டர் விடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x