Published : 24 Feb 2017 09:19 AM
Last Updated : 24 Feb 2017 09:19 AM
நாட்டு மாட்டினங்களைக் காப்பதற்காக 10 ஆண்டு களாக காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தை நடத்திவருபவர் கார்த்திகேய சேனாபதி. அதே நோக்கத்துக்காகவே 2012 முதல் தொடர்ந்து ஜல்லிக் கட்டுக்காகக் குரல் கொடுத்தார். ‘இறுதிவரை’ போராடாமல் பின்வாங்கியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவருடன் ஒரு பேட்டி:
தை எழுச்சிப் போராட்டம்...
மாணவர்கள், இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எங்கள் அறக்கட்டளையின் 10 நோக்கங்களில் ஒன்று, நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது. ‘அந்தப் பணியை ஒரு 25 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்துவிடலாம்’ என்று நாங்கள் வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்குத் தமிழகத்தில் நாட்டு மாடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அது ஏற்படுத்திவிட்டது.
மெரினாவில் கூடியது ஜல்லிக்கட்டுக்கான கூட்டம் மட்டும்தானா?
ஆமாம், ஜல்லிக்கட்டுக்காகக் கூடியவர்கள்தான். ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை என்று எத்தனையோ விஷயங்க ளுக்காகப் போராடாமல் விட்டுவிட்டோம், இதற்காகவாவது போராடுவோம் என்று மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்கள் மற்ற கோரிக்கைகளை முழங்கியதில் தவறில்லை. ஆனால், ‘அவற்றையும் நிறைவேற்றினால்தான் இங்கிருந்து கிளம்புவோம்’ என்று சொல்வது சரியாகாது. கண்ணில் பிரச்சினை என்று கண் மருத்துவரிடம் போகிறோம். அவர் சிகிச்சை அளிக்கிறார். உடனே, எனக்கு மூட்டும் வலிக்கிறது. அதையும் குணப்படுத்தினால்தான் இங்கிருந்து செல்வேன்’ என்று அடம்பிடிப்பது நியாயமா? எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே போராட்டம் எப்படித் தீர்வாகும்?
ஜல்லிக்கட்டு மட்டுமே நாட்டு மாடுகளைக் காப்பாற்றி விடுமா?
சிந்து, ஜெர்ஸி பசுக்களை வளர்ப்பவர்கள்தான் சினை ஊசி போடுகிறார்கள். வெறுமனே, ஜல்லிக்கட்டு காளையால் மட்டுமே நாட்டு மாடுகளைக் காப்பாற்ற முடியாது. நாட்டுப் பசுக்களையும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டு மாட்டினத்தைக் காக்க முடியும்.
இன்றைய பால் தேவைக்கு நாட்டு மாடுகள் போதுமா?
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முன்பெல்லாம், குழந்தைகள் மற்றும் சொந்தத் தேவைக் குத்தான் பசுக்களை வளர்த்தோமே தவிர, பால் விற்பதற்காக அல்ல. பாலை விற்பது நம் தென்னிந்திய கலாச்சாரமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பால் நமது உணவே அல்ல. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மையானோர் அசைவம் சாப்பிடுபவர்கள்தான். குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடுவார்கள். எஞ்சிய 2% பேர்தான் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்காகப் பால் அருந்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இப்போது நாம் எல்லோருமே, அளவுக்கு அதிகமாக பாலைப் பயன்படுத்துகிறோம். அதைத் தவிர்த்துவிட்டால், நாட்டு மாடுகளால் நிச்சயமாக நம் பால் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும்.
போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டது சரியா?
அரசியல்வாதிகளே வேண்டாம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம், “வாங் கய்யா.. நீங்களும் எங்களோடு வந்து உட்காருங்கள்” என்று அவர் கள் சொல்லியிருக்க வேண்டும். கடைசியில் நமது கோரிக்கை களை நிறைவேற்றித் தரும் இடத்தில் அவர்கள்தானே இருக்கிறார் கள். அவர்கள் வேண்டாம் என்றால், டொனால்டு ட்ரம்ப்பிடம் போயா இந்தக் கோரிக்கைகளை நாம் முறையிட முடியும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT