Last Updated : 18 Apr, 2017 09:43 AM

 

Published : 18 Apr 2017 09:43 AM
Last Updated : 18 Apr 2017 09:43 AM

அமரிந்தரை அரவணைத்திருக்க வேண்டும் காங். தலைமை

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அமரிந்தர் சிங், என்னுடன் பங்கேற்ற ‘பொது உரையாடல்’ நிகழ்ச்சியில், முக்கியத்துவம் வாய்ந்த சில தகவல்களை எந்தவிதப் பாசாங்கும் இல்லாமல் தெரிவித்தார். அவருடைய வெளிப்படையான பதில்கள் அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நிச்சயம் அதிருப்தியை அளித்திருக்கும்.

முதலாவது கேள்வி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆஆக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ள ஐயம் பற்றியது. “வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருந்தால் இந்நேரம் பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பாதலோ அவருடைய மகன் சுக்வீர் சிங் பாதலோ தான் அமர்ந்திருப்பார்கள்” என்றார்.

இரண்டாவதாக, “ஒரு மாநிலத்தில் கட்சி வெற்றிபெற வலுவான மாநிலத் தலைவர்கள் அவசியம் என்பதை தேசியக் கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று தன்னுடைய வெற்றிக் கான காரணத்தைக் குறிப்பிட்டார்.

மூன்றாவதாக, காங்கிரஸ் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்க முடிந்ததற்கான காரணம், வேட்பாளர்கள் தேர்வில் தனக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததுதான் என்றார். கடந்த முறை 117 வேட்பாளர்களில் 46 பேரை மட்டுமே தன்னால் தேர்ந்தெடுக்க முடிந்தது என்றார்.

மூன்றாவதாக, காங்கிரஸ் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்க முடிந்ததற்கான காரணம், வேட்பாளர்கள் தேர்வில் தனக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததுதான் என்றார். கடந்த முறை 117 வேட்பாளர்களில் 46 பேரை மட்டுமே தன்னால் தேர்ந்தெடுக்க முடிந்தது என்றார்.

அவருடைய இந்த பதில்கள் காங்கிரஸ் தலைமைக்கும், தலைமையின் கூடவே இருக்கும் விசுவாசிகளுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்காது.

அமரிந்தர் கூறியதிலேயே மிக முக்கியமானது, கனடா நாட்டின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சீக்கிய அமைச்சர்கள் பற்றியது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவின் அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் முன்னாள் கர்னல் ஹர்ஜீத் சிங் சஜ்ஜனைச் சந்திக்கக்கூட மாட்டேன் என்றார். ஆப்கன் போரில் கனடா ராணுவத்துக்காகப் பணிபுரிந்த சஜ்ஜன், பஞ்சாபை தனிநாடாக்க வேண்டும் என்ற காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவரைச் சந்திக்க மாட்டேன் என்றார். தான் ஒரு சுத்த வீரன் என்பதையும் நாட்டுப்பற்று மிக்க பஞ்சாபி என்பதையும் இந்த ஒரே பதிலில் அவர் உலகுக்கு உணர்த்திவிட்டார். சஜ்ஜன் மட்டுமல்ல இதர 3 சீக்கிய அமைச்சர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்களே என்று சாடினார். சுதந்திரச் சிந்தனையாளர் என்பதால் கனடா நாட்டின் பிரதமர் ட்ரூடுவைப் பாராட்டுகிறேன் என்ற அமரிந்தர், அப்படிப்பட்ட அவர் கனடாவில் உள்ள சீக்கியர்களைச் சந்தித்துப் பேசத் தனக்குத் தடை விதிப்பது சரியா என்று கேட்டார்.

கனடா அரசு உடனே பதில் அளித்தது. கனடாவில் அமைச்சர்களாக இருக்கும் சீக்கியர்கள் காலிஸ்தான் ஆதரவாதிகள் அல்ல என்று கூறியதுடன், கனடாவுக்கு அமரிந்தர் வர தடை ஏதும் இல்லை என்றது. நாட்டுப்பற்றுடன் அமரிந்தர் தொடுத்த இந்தத் தாக்குதலின் வெற்றிக்காக அவரை தேசிய செய்தி ஊடகங்கள் நிச்சயம் முக்கியத்துவம் தந்து பாராட்டியிருக்க வேண்டும். அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும், நாட்டுப் பற்றுக்கே நாங்கள்தான் அடையாளம் என்று மார்தட்டும் பாரதிய ஜனதாவும் மனம் திறந்து வெளிப்படையாகப் புகழந்திருக்க வேண்டும். அமரிந்தர் பாஜககாரர் இல்லை என்பதால் ‘தேச பக்த’ செய்தி ஊடகங்கள் அவரைப் பாராட்ட வில்லையோ, பஞ்சாப் அவர்களுடைய கவனத்தில் இருந்து மறைந்துவிட்டதோ தெரியவில்லை.

அமரிந்தர் ஏன் கோபம் அடைந்தார்? ஏராளமான கோடீஸ்வர சீக்கியர்கள் கனடாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் பஞ்சாபுக்கு வந்து ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை களைக் கவனித்தார்கள். 1984-ல் டெல்லியிலும் அமிர்தசரஸிலும் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட புண்களை மீண்டும் கீறிவிட முயன்றதால் அவர்களை அவர் விரும்பவில்லை.

அமரிந்தர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிகூட இன்னமும் சோம்பல் முறித்து எழவில்லை, அவரை ஆதரிக்கவில்லை. அத்துடன் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களில் தனக்குள்ள பங்கையும் அது மறக்கவில்லை, எனவே கூச்சப் படுகிறது. பாஜகவுக்கு என்ன ஆயிற்று? உலகத் தலைவர்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்ப்பதிலேயே எப்போதும் கவனமாக இருக்கும் மோடி இந்த வாய்ப்பை நழுவ விடுகிறாரா? காலிஸ்தான் ஆதரவு சக்திகள் பஞ்சாபுக்கே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்ததை பாஜக ஏன் கண்டிக்கவில்லை?

கனடாவில் பாதுகாப்பு அமைச்சராகியிருக்கும் ஹர்ஜீத் சிங் சஜ்ஜனின் தந்தை, காலிஸ்தான் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து ‘உலக சீக்கியர் ஸ்தாபனம்’ (டபிள்யு.எஸ்.ஓ.) என்ற அமைப்பை நடத்தினார். இன்னொரு அமைச்சரான நவ்தீப் சிங் பைன்ஸின் தந்தை தர்ஷன் சிங் சைனி என்பவர் பப்பர் கால்சா அமைப்பின் ஊடகத் தொடர்பாளராகச் செயல்பட்டவர். இன்னொரு அமைச்சரான அமர்ஜீத் சிங் சோஹி, பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டவர். அவர் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால் விடுதலை பெற்றவர்.

காலிஸ்தான் ஆதரவு சக்திகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று தனிப்பட்ட முறையில் கனடா அரசால் வாக்குறுதி கொடுக்கப்பட்டதே தவிர, பழைய பிரச்சாரகர்களின் காலம் முடிந்து விட்டது என்று அதனால் கூற முடியவில்லை. எனவே காலிஸ்தான் ஆதரவு சக்திகள் காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் என்ற மூன்று கட்சிகளுக்கும் எதிராக பஞ்சாப் சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலேயே பிரச்சாரத்துக்கு வந்திருந்தும் அதைக் கண்டிக்க காங்கிரஸ், பாஜக தவறுவது வியப்பாக இருக்கிறது.

“காலிஸ்தான் ஆதரவாளர்தான் இந்த சஜ்ஜன் என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டேன், இனி அவருக்கு பாஜக அரசு எப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கும்?” என்று கேட்டார் அமரிந்தர் சிங்.

தேசிய பாதுகாப்பில் நரேந்திர மோடி அரசு போதிய விழிப்புணர்வோடு செயல்படவில்லை என்பதை அமரிந்தர் சிங் உரிய நேரத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். இருந்தாலும் காங்கிரஸ் வழக்கம் போல உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. அமரிந்தர், தேவைக்கு அதிகமாகவே பேசுகிறார் என்று மனதுக் குள் சலித்துக்கொள்கிறது. நரேந்திர மோடி இதை உன்னிப்பாகக் கவனித்திருப்பார். அமரிந்தர் எழுப்பிய இப்பிரச்சினையை உரிய நேரத்தில் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொள்வார். காங்கிரஸின் மூளை இப்போது இந்துத்துவாவைத் தவிர மற்றவற்றைப் பார்க்கும் நிலையில் இல் லாமல் மரத்துப் போய்விட்டது. இதை எந்தக் கட்சியாலும் குறிப்பாக தேசியக் கட்சி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் எந்தக்கட்சியாலும் அப்படியே விட்டுவிட முடியாது. இதன் விளைவுகள் தான் தேர்தலில் எதிரொலிக்கப் போகின்றன.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.

தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x