Published : 30 Oct 2014 01:19 PM
Last Updated : 30 Oct 2014 01:19 PM

அரசு அளித்த பட்டியலில் புதிய தகவல் இல்லை: சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் கருத்து

உச்ச நீதிமன்றத்தில் அரசு அளித்த பட்டியலில் புதிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆரம்பித்த இடத்திலே திரும்ப வந்து நிற்கிறோம் என, கருப்பு பண வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வு குழு தலைவர் எம்.பி.ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசு அளித்த பட்டியலில் புதிய தகவல்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் உள்ள அனைத்து தகவல்களும் ஏற்கெனவே சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருப்பவை. அது நாம் அறிந்ததே. அந்தப் பட்டியலில் உள்ளவர்களிடம் நாம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இந்த விஷயத்தில் கடந்த சில நாட்களில் புதிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதன் மீது உரிய நேரத்தில் திருப்திகரமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. மிகவும் கடினமான இவ்விசாரணை வெறும் கண்துடைப்பாக இருக்காது. முதல்கட்ட விசாரணை அறிக்கை கடந்த ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இறுதி அறிக்கை அடுத்த ஆண்டில் அளிக்கப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பட்டியல் தொடர்பாக அரசு மீது புகார் எழுந்துள்ளது. ஆனால், யாரையும் காப்பாற்ற அரசு முயற்சி செய்வதாகத் எனக்குத் தோன்றவில்லை.

இவ்வாறு ஷா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமர்த்தப்பட்டிருக்கும் இந்த சிறப்பு புலனாய்வுக் குழு, கருப்பு பண விவகாரத்தில் முழு விசாரணை செய்து வரும் மார்ச் 31, 2015-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x