Last Updated : 04 Feb, 2014 09:09 PM

 

Published : 04 Feb 2014 09:09 PM
Last Updated : 04 Feb 2014 09:09 PM

சேலத்தில் பெயரளவுக்கு இயங்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: செலவை ஏற்பதில் மத்திய, மாநில அரசுகளிடையே போட்டி

சேலத்தில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெயரளவுக்கு மட்டுமே இயங்கி வருவதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முழுஅளவில் இயங்க மாதம் ரூ.35 லட்சம் தேவைப்படும் நிலையில் இந்த தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசும், மாநில அரசே இச்செலவை செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசும் கூறுவதால் உயர் சிகிச்சை பெற முடியாமல் 11 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது. இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம் ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிக்காக மத்திய அரசு ரூ.100 கோடி, மாநில அரசு ரூ.39 கோடி என மொத்தம் ரூ.139 கோடி திட்டமதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பிரமாண்டமான முறையில் கட்டி முடிக்கப்பட்டது.

11 மாவட்ட மக்களுக்காக...

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர் உள்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குறைந்த செலவில், தரமான சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற முடியாத ஏழை, எளிய மக்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரப்பிரசாதமாக உள்ளது.

நவீன உபகரணங்கள், ஏசி அறைகள், காற்றாட்டோட்டத்துடன் கூடிய கட்டிட அமைப்பு, நவீன தொழில்நுட்ப முறையிலான அறுவை சிகிச்சை மையம் என பல்வேறு வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை மையம் இயங்கிடவும், மின்சாரக் கட்டணம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அன்றாட செலவுகள் செய்திட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாதம் ரூ.35 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த தொகை இருந்தால் மட்டுமே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முழு அளவில் இயங்க முடியும். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியும்.

நிதி ஒதுக்குவதில் போட்டி

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட போது, மத்திய அரசும், மாநில அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதில் மருத்துவமனையை கட்டி கொடுத்து விடுவதுடன் மத்திய அரசு பணி முடிந்து விடுவதாகவும், மருத்துவமனையை இயக்கத் தேவையான நிதியை மாதம் தோறும், மாநில அரசு ஒதுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை மாதந்தோறும் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பது மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம். இவ்விரு அரசுகளும் இணைந்தே மருத்துவமனையை இயக்க வேண்டும் என மாநில அரசு கூறி வருகிறது. ஆனால் 3 ஆண்டுகளாக இதற்கு மத்திய அரசு கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் உள்ளது.

இதனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முழு அளவில் இயங்கவில்லை. பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதால் பெயரளவிற்கு மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அவரவர் தரப்பு நியாயங்களை மக்களிடம் கூறி வருகின்றன. ஏழை மக்களுக்கான மருத்துவ சேவையில் மத்திய, மாநில அரசுகள் போட்டிப் போடுவதைக் கைவிட்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முழு அளவில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x