Published : 25 Mar 2014 10:53 AM
Last Updated : 25 Mar 2014 10:53 AM

சரத் பவாரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையம் விசாரணை

சொந்த ஊர், பணியிடம் என இரண்டு இடங்களில் வாக்களியுங்கள் என்று தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூறியது குறித்து தேர்தல் ஆணையம் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நவிமும்பை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் பேசிய பவார், சதாராவில் ஏப்ரல் 17ம் தேதியும் மும்பையில் ஏப்ரல் 24-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது; விரல் மையை அழித்துவிட்டு 2 இடங்களிலும் வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

இதற்காக சரத் பவார் பேச்சு அடங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. வீடியோ ஆதாரம் கிடைத்த பின் அதனை ஆய்வு செய்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று மாநில ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து நிருபர்களிடம் விளக்கமளித்த சரத் பவார், நகைச்சுவைக்காகவே அப்படி பேசினேன், எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x