Last Updated : 29 Jan, 2014 12:00 AM

 

Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ளதால் 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் நம்மாழ்வார்பேட்டை சமூக நலக்கூடம்

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நம்மாழ்வார்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் 3 ஆண்டுகளாக அந்த மண்டபத்தை மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 74- வது வார்டான நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தெரு முதல் தெருவில் மாநகராட்சி சமூக நலக் கூடம் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், திருமணம், மஞ்சள் நீராட்டு, காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்தக் கூடத்தில் நடத்தி வந்தனர். குறைந்த வாடகை என்பதால் பலருக்கும் இது பயன்பட்டு வந்தது.

இந்நிலையில், 2011-ம் நடந்த சட்ட சபைத் தேர்தலில் கொளத்தூர், எழும்பூர் தொகுதி முடிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்தத் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முழுவதும் நம்மாழ்வார்பேட்டை சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், சமூக நலக் கூடத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாமல் நம்மாழ்வார்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ராமு என்பவர் கூறியதாவது:

74-வது வார்டில் நம்மாழ்வார்பேட்டை, தலைமைச் செயலக காலனி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள். இவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்த சமூக நலக்கூடம் பயன்பட்டு வந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சமூக நலக்கூடம், படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்தது. 74- வார்டு பகுதி மக்கள் மட்டுமின்றி ஓட்டேரி, அயனாவரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயன்பட்டு வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டில் கூடத்தை மேம்படுத்துகிறோம் என்று சொல்லி மூடிவிட்டனர். 5 ஆண்டுகளாக நத்தை வேகத்தில் நடந்த பணிகள், 2010-ல் தான் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு திறக்கப்பட்ட சமூக நலக்கூடம், 6 மாதங்கள் மட்டுமே மக்களுக்கு பயன்பட்டது.

2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பே, கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டன.

தேர்தல் முடிந்த பிறகாவது மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என மக்கள் காத்திருந்தனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு கொளத்தூர், எழும்பூர் தொகுதி முடிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், 2 தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சமூக நலக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனால், இப்பகுதி மக்கள் தனியார் திருமண மண்டபங்களில் 80 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் என அதிக வாடகை செலுத்தி, விழாக்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ராமு தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கொளத்தூர், எழும்பூர் தொகுதிகளின் தேர்தல் முடிவு தொடர்பான வழக்குகள் முடிவதற்கு இன்னும் ஓராண்டாகும். வழக்குகள் முடியும் வரை, சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுக்க இயலாது. பொதுமக்களின் சிரமத்தை தீர்க்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அப்படி வாபஸ் பெற்றால், உடனே வாக்குப் பதிவு இயந்திரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x