

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கடற்கரை பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த ஆலிவர் ரெட்லி ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குகின்றன. இதற்கு தனியார் மின் உற்பத்தி நிலைய கழிவுகள் காரணமா? என ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு ஆகிய ஊர்களின் கடற்கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆலிவர் ரெட்லி வகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளன. அவைகளை பார்க்கும் மீனவர்கள் இறந்துகிடக்கும் ஆமைகள் மீது மணலைக் கொட்டி மூடுகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து வரும் இந்த ஆமைகள் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண்டுதோறும் இப்படி முட்டையிடுவதற்காக தமிழ்நாட்டுக்கு கடலில் நீந்தி வரும் இந்த அரிய வகை ஆமைகள் கப்பல் மற்றும் படகுகளில் மோதி இறந்து போகின்றன.
ஆனால், தரங்கம்பாடி பகுதியில் அதிகம் இறந்து கரை ஒதுங்கக் காரணம், அருகாமையில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுகளாக இருக்கலாம். அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் சூடான நீர் கடலில் கலப்பதால் அதனால் பாதிக்கப்பட்டு இவை இறந்திருக்கலாம் என்று கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்டோர் மீட்பு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், மாநிலச் செயலர் சி.குணசேகரன் ஆகியோர் கூறியது: “இந்த ஆமைகள் ஆலிவர் ரெட்லி வகையைச் சேர்ந்தவை. இவை பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகையைச் சேர்ந்த ஆமைகளாகும். அருகாமையில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுகளாலும், சூடான நீர் கடலில் கலப்பதாலும் பாதிக்கப்பட்டு இவை இறந்திருக்கலாம்.
கப்பல்களில் மோதியும் இறந்திருக்கலாம். முட்டையிடுவதற்காக தமிழகக் கடற்கரைப் பகுதிக்கு வரும் இவை, பின்னர் திரும்பிச் செல்ல முடியாமல் இறந்து விடுகின்றன. இந்த வகை ஆமைகளின் இறப்பைத் தடுப்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.