Published : 03 Mar 2018 08:01 AM
Last Updated : 03 Mar 2018 08:01 AM

தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்ட்டர்: தீவிர தேடுதல் வேட்டையில் 12 நக்சல்கள் சுட்டுக் கொலை- காவலர் ஒருவர் பலி; 2 போலீஸார் படுகாயம்

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லை யில் உள்ள வனப்பகுதியில் போலீஸாருக்கும் நக்சல்களுக்கும் இடை யே நேற்று முன்தினம் இரவு பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவ லர் ஒருவர் உயிரிழந்தார்.

தெலங்கானா - சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள ஜெய்சங்கர் பூபால பல்லி மாவட்டம், வெங்கடாபுரம் மண்டலம், தடவலகுட்டா வனப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக இரு மாநில போலீஸாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நக்சல் ஒழிப்புப் படைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸார், நேற்று முன்தினம் இரவு அந்த வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் வருவதை அறிந்த நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி மட்டுமின்றி போலீஸார் மீது கையெறி குண்டுகளையும் வீசி நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். பல மணிநேரம் இந்தச் சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில் 12 நக்சல்கள், போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாயினர். இவர்களில் 6 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் ஆவர். இந்நிலையில், நக்சல்களின் தாக்குதலில் ஆயுதப்படையைச் சேர்ந்த சுஷில் குமார் என்ற காவலர் உயிரிழந்தார். 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். இருவரும் தெலங்கானாவில் உள்ள பத்ராச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும் ரூ.41 ஆயி ரம் ரொக்கம், லேப்டாப்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், தப்பியோடிய நக்சல்களைப் பிடிப்பதற்காக வனப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு

இந்நிலையில், இந்த என்கவுன்ட் டர் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தெலங்கானா மாநில மனித உரிமைக் கழகத்தினர் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதா வது:

சத்தீஸ்கர் - தெலங்கானா மாநில எல்லையில் தற்போது நடைபெற்றிருப்பது ஒரு போலி என்கவுன்ட்டர் ஆகும். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி, அவர்களை போலீஸார் அடிக்கடி சுட்டுக்கொல்கின்றனர். எனவே, இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்த வேண்டும். மேலும், என்கவுன்ட்டரில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் சடலங்களுக்கு வாரங்கல் அரசு மருத்துவமனையில்தான் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தெலங்கானா மாநிலம், பத்ராசலம் அரசு மருத்துவமனையில் வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, இவ்வழக்கு 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நக்சல் இயக்கச் செயலாளர் பலி?

இந்த என்கவுன்ட்டரில் தெலங்கானா மாநில நக்சல் இயக்கச் செயலாளர் ஹரிபூஷணும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக போலீஸ் தரப்பில் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர் தப்பிவிட்டதாக போலீஸ் உயரதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர். எனினும், ஹரிபூஷண் தொடர்பாக காவல் துறை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. ஹரிபூஷண் மீது தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரை உயிருடன் பிடித்துக் கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெலங்கானா காவல்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹரிபூஷணின் மனைவி சம்மக்கா, இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x