Published : 07 Jul 2018 07:41 AM
Last Updated : 07 Jul 2018 07:41 AM

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சு: இலங்கை அமைச்சர் திடீர் ராஜினாமா

இலங்கையில் சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத் துறை துணை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணம் சுழிப்புரத்தைச் சேர்ந்த 6 வயது தமிழ்ச் சிறுமி கடந்த ஜூன் 25-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார துணை அமைச்சரும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான விஜயகலா மகேஷ்வரன், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “பள்ளிச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எங்கள் மக்களை அதிபர் காப்பாற்றவில்லை. 2009-ம் ஆண்டு போருக்கு முன்பு விடுதலைப் புலிகள் காலத்தில் எப்படி பாதுகாப்பாக வாழ்ந் தோம் என்பதை இப்போதுதான் உணர்கின்றோம். நாங்கள் நிம்மதியாக வாழ வும் எங்களுடைய பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்பவும் வேண்டும் என்றால் மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இவரது கருத்து நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்தை கிளப்பியது. விஜயகலாவை பதவி நீக்குமாறு எதிர்க்கட்சியினர் கோரினர். இதையடுத்து, அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், விஜயகலா மகேஷ்வரன் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மக்கள் படும் துயரங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் குரல் கொடுத்தேன். மக்களுக்காகவே பதவி துறந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x