Published : 27 Jun 2018 09:22 AM
Last Updated : 27 Jun 2018 09:22 AM

தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை

ல்ல வாழ்வின் தொடக்கத்துக்கு வாசிப்பு பழக்கம் அவசியம் என்பது அறிஞர்களின் கருத்து. ஆனால் மதுரையில் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள் புதுமணத் தம்பதிய ஒன்று.

பொதுவாக திருமண விழாக்களில் உறவினர்கள், நண்பர்களுக்கு, மணமக்கள் வீட்டார் தாம்பூலப் பையில் பழங்கள், தேங்காய், இனிப்புகள் வைத்து வழங்குவர். தற்போது திருமண விழாக்களில் பசுமையை பரப்பும் முயற்சியாக தாம்பூலப் பையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

மதுரை விசுவநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ரமேஷ், புதிய முயற்சியாக தனது மகள் அகல்யாவின் திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்களுக்கு தாம்பூல பையில் பழம், தேங்காய் வைப்பதற்கு பதிலாக புத்தகங்களை வைத்துக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொறுப்பில் இருக்கும் ரமேஷ் புத்தகப் பிரியர். மேலும் தனது உறவினர்கள், நண்பர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்களை வழங்குவார். ஏற்கெனவே அவர் பணி ஓய்வு விழாவில் கூட அனைவருக்கும் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்கினார்.

அதன்பின் இளைஞர்கள், மாணவர்களுக்கு, தான் படித்த புத்தகங்களை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தொடர்ந்து புத்தகங்கள் வாங்கி கொடுக்க வசதி இல்லாவிட்டாலும் அருகில் உள்ள நூலகங்களுக்கு இளைஞர்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:

சிறு வயது முதலே புத்தகம் வாசிப்பதில் எனக்கு ஈடுபாடு அதிகம். நான் வாசித்த புத்தகத்தில் உள்ள நல்ல கருத்துகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் அல்லது அந்த புத்தகத்தை மற்றவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக சிறு முயற்சியாக எனது மகள் திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலப் பையில் புத்தகங்களை வைத்து கொடுத்தேன். இது வித்தியாசமான முயற்சி என அனைவரும் பாராட்டினர்.

இனிக்கும் இல்லறம், அயல்நாட்டு பொன்மொழிகள், குராயூர் எரியீட்டி எழுதிய இல்வாழ்க்கையில் காரல் மார்க்சும் ஜென்னியும் ஆகிய 3 புத்தகங்களை வழங்கினேன். எனது பணி ஓய்வு விழாவில் 400 பேருக்கு பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள், ரஷ்ய எழுத்தாளர் எழுதிய சிலந்தியும் ஈயும் ஆகிய புத்தகங்களை வழங்கினேன்.

சிலருக்கு புத்தகங்களை படிக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால், கடைகளுக்குச் சென்று புத்தகம் வாங்க நேரம் இருக்காது. அவர்களது வாசிப்பு பழக்கத்தை தூண்டினால், மறுமுறை அவர்களே சென்று புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவர். அந்த முயற்சியைத்தான் செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் புத்தகங்களையும் போட்டுக் கொடுக்கும்போது தாம்பூலப் பை மதிப்புமிக்கதாக மாறிவிடுகிறது. பையே மதிப்பானதாக மாறும்போது, வாசிக்கும் பழக்கம் கொண்ட மனிதர் எத்தனை மதிப்பானவர் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வாசிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x