Published : 14 Nov 2017 10:30 AM
Last Updated : 14 Nov 2017 10:30 AM

விமோசனம் பெறுகிறது எம்.ஜி.ஆர் இல்லம்

கே

ரளத்தின் பாலக்காடு ஜில்லா வடவனூரில் இருக்கிறது எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு. இந்த வீடு கவனிப்பாரற்றுக் கிடப்பது குறித்து, ‘சிதிலமடையுதே எம்.ஜி.ஆர் பிறந்த வீடு - எங்கே போனார்கள் அவரது விசுவாசிகள்?’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி இதழின், ‘இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதியில் கட்டுரை வெளியானது. அதைத் தொடர்ந்து, இப்போது அந்த வீட்டுக்கு விமோசனம் கிடைப்பதற்கான வழிகள் திறந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் பிறந்த வீடு சிதிலமடைந்து வருவது குறித்து ‘தி இந்து’வில் வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு அ.தி.மு-வைச் சேர்ந்த பலரும் நம்மிடம் அக்கறையோடும் ஆதங்கத்தோடும் விசாரித்தனர். ஒருசிலர், அந்த வீட்டை புனரமைக்க என்னவெல்லாமோ செய்யப் போவதாகச் சொன்னார்கள். எனினும் இதுவரை, யாராலும் எந்த விமோசனமும் நடந்ததாகத் தெரியவில்லை.

வடவனூர் வந்த சைதை துரைசாமி

இந்த நிலையில், மதுரையின் முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினரோடு கடந்த வாரம் வடவனூர் எம்.ஜி.ஆர் இல்லத்துக்கு வருகை தந்தார் சென்னையின் முன்னாள் மேயரும் எம்.ஜி.ஆர் விசுவாசியுமான சைதை துரைசாமி. வீட்டையும் அங்கு செயல்படும் அங்கன்வாடி மையத்தையும் சுற்றிப் பார்த்த அவர், அங்கன்வாடி குழந்தைகளுக்கு பழம், இனிப்புகள் வழங்கியதுடன் அங்குள்ள ஆசிரியைகளுக்கு புதுத் துணிகளும் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைசாமி, “இந்தக் கட்டிடத்தை தொன்மை மாறாமல் அப்படியே புதுப்பிக்க இருக்கிறோம். அதற்கான பணிகள் குறித்து கலந்து ஆலோசிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அங்கன்வாடி குழந்தைகளை இந்த வீட்டுக்குள் தங்க வைக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு கொட்டகை அமைத்துக் கொடுத்து அங்கே தங்கவைக்கத் திட்டமிடுகிறோம்.

அ.தி.மு.க. சார்பில்..

இந்த வளாகத்துக்கு அழகான முறையில் சுற்றுச் சுவர் எழுப்பி, காலி இடத்தில் இயற்கை விவசாய முறையில் காய்கறிகளை பயிரிட இருக்கிறோம். இங்கு விளையும் காய்கறிகள் இங்கு படிக்கும் குழந் தைகளின் மதிய உணவுக்காக பயன்படுத்தப்படும். எம்.ஜி.ஆர் இல்லத்தை புனரமைப்பு செய்யும் பணிகள் அனைத்தும் அ.தி.மு.க கட்சி சார்பிலேயே செய்யப்படும்.

எம்.ஜி.ஆருக்கு கேரளத்திலும் செல்வாக்கும் புகழும் இருக்கிறது. எனவே, எம்.ஜி.ஆர் இல்லத்தை புனரமைத்து ஒரு நூலகமாக மாற்ற இருக்கிறோம். அந்த நூலகத்தில் எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட அரிய புகைப்படங்கள், வீடியோ ஆல்பம் மற்றும் புத்தகங்கள் தொகுத்து வைக்கப்படும்” என்று சொன்ன துரைசாமி, “உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் கலந்து பேசி இந்தப் பணிகள் அனைத்தும் காலத்தே முடிக்கப்படும்” என்றும் உறுதியளித்தார்.

விரைவில் புதுப்பொலிவு பெறும்

வடவனூர் பஞ்சாயத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் செயல்படும் சமூகக் கூடத்தையும் சென்று பார்த்த துரைசாமி, நிறைவாக நம்மிடம் பிரத்யேகமாக பேசுகையில், “இந்த இல்லத்துக்கு நான் ஏற்கெனவே பலமுறை வந்திருக்கிறேன். இதை புதுப்பிக்கணும்னு கடந்த ஒன்றரை வருசமா நினைச்சுட்டு இருந்தேன். பல்வேறு சூழ்நிலைகளால் காலம் கடந்து கொண்டே போனது. இந்நிலையில், ‘தி இந்து’வில் செய்தியைப் பார்த்ததும் மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.

அப்பவே இந்த இல்லத்துக்கு வரணும்னு நினைச்சேன்; அதுவும் முடியலில்லை நேரில் வந்து இந்த வீட்டைப் பார்த்ததும் ரொம்பச் சங்கடமாப் போச்சு. உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு விரைவில் இந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும்” என்று உறுதிபடச் சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x