Last Updated : 21 Nov, 2017 01:06 PM

 

Published : 21 Nov 2017 01:06 PM
Last Updated : 21 Nov 2017 01:06 PM

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய புதுச்சேரிக்கு மத்திய அரசு அனுமதி

விவசாயக் கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. சுமார் ஒன்றரையாண்டுகளாக இருந்த அலைக்கழிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன் ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய மாநில அமைச்சரவை மூலம் முடிவு செய்தது.

அதற்கான கோப்பினை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பினர். இதுதொடர்பான இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவீர்கள் என்று ஆளுநர் கோப்பினை திருப்பி அனுப்பினார். அதையடுத்து கூட்டுறவுத்துறைக்கு ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளில் சீராக்கி விடுவோம் என்று கோப்பினை மீண்டும் அரசு தரப்பிலிருந்து அனுப்பினர்.

கூட்டுறவுக் கடன் தவிர, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களையும் ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது எனக்கேட்டு ஆளுநர், கோப்பை திருப்பி அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்யமுடியும். எங்களால் கூட்டுறவு வங்கிக் கடனை மட்டுமே தள்ளுபடி செய்ய முடியும் என குறிப்பிட்டு மீண்டும் ஆளுநருக்கு கூட்டுறவுத்துறை அனுப்பியது.

ஆனால் ஆளுநர் அதை ஏற்காமல் கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டார். 15 மாதங்கள் கழித்து மத்திய அரசிடம் இருந்து தலைமைச் செயலாளருக்கு சில மாதங்கள் முன்பு கடிதம் வந்தது. அதையடுத்து அக்கோப்புக்கான பதிலை புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

விவசாயக்கடன் தள்ளுபடி தொடர்பாக கோப்பில் முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் புதிய கடன் தரப்படவில்லை. தற்போது புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகள் தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெறும் சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக தி இந்துவில் செய்தி வெளியானது.

மத்திய உள்துறையின் பரிசீலனையில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான கோப்பு இருந்த நிலையில் உள்துறையிடம் இருந்து ஆளுநர் கிரண்பேடியின் செயலாளர் தேவநீதிதாசுக்கு வந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது :

விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான புதுவை அரசின் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. எத்தகயை கடன் தள்ளுபடிக்கும் மத்திய அரசு நிதியுதவி எதுவும் செய்யாது. மேலும் வர்த்தக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடியை செய்வதை ஏற்க முடியாது. எனினும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையை புதுவை அரசு தள்ளுபடி செய்யலாம். ஆனால் இதற்கும் மத்திய அரசு எந்த நிதியுதவியும் வழங்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ஒன்றரையாண்டுகள் அலைக்கழிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x