Published : 23 Sep 2017 10:22 AM
Last Updated : 23 Sep 2017 10:22 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 8: வாரத்துக்கு 7 மணி நேரம் ஒதுக்குவோம்

ல்வேறு யோகாசனங்கள் செய்வதற்கு நம் உடலைத் தயார்படுத்துவதற்கானப் பயிற்சிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். இதில், அடுத்த பயிற்சியாக மூச்சை உள்ளிழுத்தபடியே, இரண்டு கைகளையும் நன்றாக மேலே தூக்க வேண்டும். பிறகு, மூச்சை வெளியே விட்டபடியே பொறுமையாக குனிந்து தரையைத் தொட வேண்டும். இதுபோல 10 முறை செய்ய வேண்டும். Vertigo பிரச்சினை உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்து வலிக்காக காலர் அணிந்திருப்பவர்கள், கர்ப்பிணிகள் இப்பயிற்சியை செய்யக் கூடாது. மற்றபடி, சாதாரண உடல்நிலை உள்ளவர்கள் இதுவரை நாம் கண்ட 8 பயிற்சிகளையும் தாராளமாகச் செய்யலாம். இந்த 8 விதமான பயிற்சிகளையும் காலையில் 5 முறை செய்தால் போதும்.இதற் காக நாம் செலவிடப்போகும் நேரம் 15-20 நிமிடங்கள் மட்டுமே.

168 மணி நேரம் யாருக்காக?

‘வைகறை துயில் எழு’ என்பார்கள். இது இன்றைய தலைமுறை அறியாத ஒரு சொல். வைகறை என்றால் அதிகாலை நேரம். அதாவது, பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரம். இன்று நள்ளிரவு வரை லேப்-டாப்பில் வேலை, வாட்ஸ்-அப்பில் சாட்டிங் என நேரத்தைக் கடத்திவிட்டு, காலையில் அரக்கப் பறக்க எழுந்து, என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல் சாப்பிட்டு, விழி பிதுங்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தடுமாறி, அலுவலகத்துக்கு ஓடிக்கொண்டிருக்கிற சூழலில், வைகறை அழகை ரசிக்க நமக்கு எங்கே இருக்கிறது நேரம்?

அதிகாலை எழுவது எப்படி?

அலுவலகம் செல்பவர்களோ, இல்லத்தில் பணிகளை மேற்கொள்பவர்களோ, யாராக இருந்தாலும் தங்களது ஆரோக்கியத்துக்கும், உடல்நலனுக்கும் குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும் . இதை எப்படி சாத்தியப்படுத்துவது? தினமும் இரவில் சீக்கிரம் படுக்கப்போனால், அதிகாலையில் எழமுடியும். இதை வழக்கத்துக்கு கொண்டுவந்தால், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நமது உடல்நலனுக்காகச் செலவிட முடியும்.

நமது உடலுக்கும், அதில் உறையும் ஆன்மாவுக்கும் சேர்த்து தினசரி உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி வைத்திருந்தனர் முன்னோர்கள். அதையும் தங்களது தினசரி நியமமாக, கடமையாக உணர்வுபூர்வமாக உணர்ந்து செய்தனர். அதனால்தான், முழு ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்தனர். இன்றோ நாம் அதை ‘கடமைக் காக’ செய்துகொண்டிருக்கிறோம்.

சிரமப்பட்டு யோகா கற்றுக்கொண்டாலும், பலரும் அதை தொடர்வதில்லை. பள்ளியிலும் உடற்கல்விக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படுவது இல்லை.

ஒரு மணி நேரத்தில் பலன்

ஒருவர் உடற்பயிற்சி செய்வதால், உடலை நல்ல வடிவத்துடன் வைத்திருக்கலாம். உதாரணத்துக்கு, ஒருவர் ஒரு மணி நேரம் நன்றாக நடைபயிற்சி செய்தால், அதன் பலன்களை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் உணர முடியும். அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதை உணர முடியும். யோகாப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால், அவரது வடிவம், உயரம், எடை மற்றும் மனம் சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றத்தைக் கண்கூடாகக் காண முடியும்.

நல்ல திடமான மனம், உள்ள உறுதி,சோர்வு இல்லாத உடல் இவை அனைத்தும் உடற்பயிற்சி செய்த அடுத்த நிமிடமே நமக்கு கிடைக்கும்.ஒரு நாளுக்கு 24 மணி நேரம். வாரத்துக்கு மொத்தம் 168 மணி நேரம். இந்த 168 மணி நேரத்தில் நமது உடல் நலனுக்காக குறைந்தபட்சம் 7 மணி நேரம் நம்மால் செலவிட முடியாதா? சனி, ஞாயிற்றுக்கிழமைகளை ஓய்வுக்காக செலவிட்டாலும் மீதம் 5 மணி நேரத்தை நமது ஆரோக்கியத்துக்காக செலவு செய்யலாமே!

உடல் என்ற அற்புதக் கூடு

நம் உடம்பு 206 எலும்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட அற்புத மான கூடு. உடலின் எடை,வலிமையைப் பொறுத்துதான் நம் தசைகளின் இயக்கம் அமைந்துள்ளது. உடம்பில் 50 சதவீதம் உள்ள தசையை எந்த அளவுக்கு உறுதியாக வைக்கிறோமோ, அவ்வளவு அற்புதமாக நம் உடல் இருக்கும்.

ரத்த ஓட்டம், இதர இயக்கங்கள் சீராக இருந்தால், அதற்கேற்ப உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இளமையாக, நோயற்ற வாழ்வு வாழமுடியும். உறுதியுடன் யோகாசனங்கள் செய்வோம். நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

- யோகம் வரும்...

ழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x