வாட்ஸ் அப் வாழ்க்கை

வாட்ஸ் அப் வாழ்க்கை
Updated on
1 min read

‘வாட்ஸ் அப்'பின் அதீத உபயோகம்பற்றிய கட்டுரை மற்றும் அதற்கான மனநல மருத்துவரின் அறிவுரைகள், இன்றைய இளைஞர்களின் மனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதுபோல் இருந்தது.

தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும் இளைஞர்கள் குறித்துதான், இன்றைய பெற்றோர்கள் அதிகம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது.

குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், தங்களின் படிப்பைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலை கொள்ளாது, எப்போதும் செல்போனும் கையுமாக, மற்ற நண்பர்களோடு ஒப்பிட்டு, அதற்காக அதிக செலவுகள் செய்து, தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.

அலை பேசி இல்லாமல் ஒரு நிமிட நேரம்கூட இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய இளைஞர்கள், அதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் அதனூடே தங்களின் நாட்களை வீணே கழிக்கிறார்கள்.

இதனால், மற்றவர்களிடம் பழகுவது, கலந்து பேசி உரையாடுவது, எதிர்காலத்தைத் திட்டமிடுவது, மனம்விட்டுப் பேசுவது போன்றவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது.

பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பெற்றோர்கள், ஒரு நண்பனைப் போல, பிள்ளைகளின் அன்றாடச் செயல்களை அருகில் இருந்து, உன்னிப்பாகக் கவனித்து, தேவைக்கேற்பத் தக்க அன்பான அறிவுரை வழங்குவது, இரு தரப்பினருக்குமே மிகவும் நல்லது.

- பி. நடராஜன்,மேட்டூர் அணை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in