

நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், தங்களது ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வராத காரணத்தால், கடந்த நவம்பர் 12-ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
இதைத் தொடர்ந்துதான், மண்டலவாரியாக நடைபெறும் தற்போதைய வேலைநிறுத்தம். வங்கி ஊழியர்களின் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்துவருகிறது. இந்திய வங்கிகள் நிர்வாகமும் அரசும், வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை மறுப்பது நேரடியான தொழிலாளர் விரோதப் போக்கே.
வங்கி ஊழியர்கள் தங்களது கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி இரண்டாண்டுகள் ஆகியும், பேச்சுவார்த்தை மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நினைத்தார்கள். ஆனால், 14 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், மத்திய அரசும் இந்திய வங்கிகள் நிர்வாகமும் சற்றும் இறங்கி வரவில்லை. இந்தப் போராட்டத்தால் மக்களுக்குத்தான் சிரமம். வங்கி ஊழியர் ஊதிய விஷயத்தில் நியாயமான தீர்வு காண மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.