Published : 10 May 2018 09:11 AM
Last Updated : 10 May 2018 09:11 AM

இப்படிக்கு இவர்கள்: கவலையளிக்கிறது காவிரி விவகாரம்!

ப.ராஜ்குமார், புதுச்சேரி.

கவலையளிக்கிறது காவிரி விவகாரம்!

மே

9-ல் வெளியான ‘காவிரி: இன்னும் எவ்வளவுதான் கீழே போகும் அரசு?’ தலையங்கம் சிறப்பானது. காவிரியை வைத்துக்கொண்டு மத்திய அரசு படுத்தும்பாடு, அதன் மன ஓட்டத்தை உலகறியச் செய்துவிட்டது. ஒவ்வொரு தேசிய அமைப்பாக பலவீனப்படுத்திவரும் மத்திய அரசு, நீதிமன்ற அமைப்புக்கும் அதனைச் செய்திருப்பது வருந்தத்தக்கது. மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அரசாக இருக்கும் எனும் மக்கள் நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது. கட்சிகளைக் கடந்து ஒரு சில தமிழக மக்கள் கொண்டிருந்த நல்லெண்ணத்தையும் மத்தியில் ஆளும் கட்சி இழப்பதற்கு காவிரி விவகாரத்தில் அதன் தற்போதைய நிலைப்பாடு காரணமாகிவிட்டது.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

கைகளில் அடங்காத காலம்!

மே

8-ல் வெளியான ‘காற்றில் கரையாத நினைவுகள்’ பகுதியில் அன்றைய வாழ்க்கையையும், இன்றைய வாழ்க்கையையும் ஒப்பிட்டு வாரந்தோறும் சுவையான சம்பவங்களைப் பகிரும் வெ.இறையன்புவின் எழுத்துக்கள் சுவாரஸ்யமாக உள்ளன. ரேடியோ, சைக்கிள், மின்விசிறி, புகைப்படம் எல்லாம் அன்றைய தினத்தில் ஒரு உச்சபட்ச பொக்கிஷமாக இருந்தன. இன்றைய கையடக்கக் கருவியில் எல்லாம் கிடைத்தும்கூட அன்றைய தினம் அளித்த மகிழ்வில், நிம்மதியில் கால் பங்கு கூட இன்று கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். கால மாற்றம் சகஜம்தான் என்றாலும் எளிய சாதனங்கள் தந்த மகிழ்ச்சி தொலைவது என்பது வருத்தம் தரும் விஷயம்!

கே.ஆர்.மாலதி, சென்னை.

நீட் விவாதம்:

அனைத்துத் தரப்புக்கும் வாய்ப்பு

செ

ன்னையைச் சேர்ந்த நான், இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். நீட் தொடர்பாக மே 6-ல் வெளியான ‘மறக்கப்படும் மறுபக்க நிஜங்கள்’ கட்டுரை, பிரச்சினையின் இன்னொரு பக்கத்தின் மீதும் வெளிச்சம் பாய்ச்சியிருந்தது. எந்தவொரு விஷயத்திலும் அதன் பல தரப்புகளுக்கும் ‘தி இந்து’ வாய்ப்பு தருவது தொடரட்டும்.

அ.சாமித்துரை, ஒரத்தநாடு.

கொள்கை மாறிவிட்டார்களா

கம்யூனிஸ்ட்டுகள்?

மே

ற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ரகசிய கூட்டணி ஏற்பட்டிருப்பதாக வெளிவந்த செய்தியைக் கண்டதும் (மே-9)அதிர்ச்சியாக இருந்தது. ‘இது உள்ளாட்சி அளவிலான ஏற்பாடு, கட்சிக் கொள்கைக்கும் உள்ளாட்சி அளவிலான அணுகுமுறைக்கும் தொடர்பில்லை என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடியா மாவட்டச் செயலாளர் சுமித் தேவ். ‘அது வெறும் வதந்தி, திரிணாமுல் காங்கிரஸ் இதுபோன்ற வதந்திகளைத் திட்டமிட்டே பரப்பிவருகிறது. திரிணாமுல், பாஜக இரண்டையும் எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார் சீதாராம் யெச்சூரி. உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட்டுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளைக் காரணம் காட்டி, அவர்கள் கொள்கையிலிருந்து பிறழ்ந்துவிட்டார்கள் என்று முடிவுகட்ட வேண்டியதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x