

வேலைவாய்ப்புகள் குறித்த கல்லூரி மாணவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், தனியார் நிறுவனங்களில் அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பின் தன்மைக்குமான இடைவெளி குறித்து ‘அன்ஸ்டாப்’ என்னும் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.
நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில், கையாள்வதில் இன்றைய மாணவர்களிடம் போதாமை இருப்பதாக அதில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுக்க 37,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல நிறுவனங்களைச் சேர்ந்த 500 மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோரிடம் விரிவான கணக்கெடுப்பை மேற்கொண்டு, ‘திறன் அறிக்கை 2026’ஐ ‘அன்ஸ்டாப்’ நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
வழக்கமான பட்டப்படிப்புகள் மீதான பிரமிப்பு குறைந்துவருவதாகவும் பல்வேறு துறைகளில் சம்பள வேறுபாடுகள் சுருங்கி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சம்பளம் குறித்த எதிர்பார்ப்பு, உண்மையான சம்பளம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான இடைவெளி பெருகிவருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.