

வாழ்வுரிமையில் மாதவிடாய் சுகாதார உரிமையும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசமைப்பின் 21வது பிரிவு, வாழ்வதற்கான உரிமையைக் குறிக்கிறது. அதில் மாதவிடாய் சுகாதார உரிமையும் இடம்வகிக்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
நாடு முழுவதும் பள்ளிச் சிறுமிகளுக்கு மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி, ஜெயா தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
சுகாதாரப் பொருள்கள் கிடைக்காதது அரசமைப்பின் 21ஏ பிரிவின்கீழ் உள்ள கல்விக்கான அடிப்படை உரிமையையும், கல்வி உரிமைச் சட்டத்தையும் பாதிக்கிறது என்றும் நீதிமன்றம் ஆணித்தரமாகக் கூறியுள்ளது.