

தனியார் பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டண விவரங்களைப் பள்ளி வளாகங்களிலும் இணையத்தளங்களிலும் தெரிவிக்க வேண்டும் என்பது காகிதக் கோப்புகளில் மட்டுமே நிலவும் விதிமுறையாகவே இருந்துவரும் சூழலில், இதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தகுந்தது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.லியாகத் அலி என்பவர், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விவரங்களைக் கோரி 2022இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மாவட்டக் கல்வித் துறையிடம் மனுத் தாக்கல் செய்தார்.
இது குறித்து மூன்றரை ஆண்டுகளாக அவருக்கு முழுமையான தகவல்கள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், அவர் மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இம்மனுவை அண்மையில் விசாரித்த மாநிலத் தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி, பல தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விதிமீறல்களுக்குக் கடிவாளம் போடும்வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.