

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்புப் பணியின்போது, மீண்டும் வெடிமருந்துகள் வெடித்துத் தீயணைப்புப் படையினர், காவல் துறையினர் காயமடைந்துள்ளது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது.
பட்டாசு ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்த அரசின் அணுகுமுறை பல மடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என்பதையே இந்த விபத்து உணர்த்துகிறது.
முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மாலையில் வெடி தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஓர் அறையில் பட்டாசு மருந்து வெடித்ததாகவும் விளைவாக அதை அடுத்திருந்த மூன்று அறைகளும் வெடித்துத் தரைமட்டமானதாகவும் கூறப்படுகிறது.
அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; படுகாயம் அடைந்த 7 பேரில் இருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். விபத்தின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், ஒரு மணி நேரத்துக்குப் பிறகே தீயணைப்புப் படையும் காவல் துறையும் மீட்புப் பணியில் ஈடுபட முடிந்தது.