

உத்தரப் பிரதேசத்தில் பெய்த புயல் மழையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது காலநிலை நெருக்கடியின் கடுமையான போக்கை உணர்த்துகிறது. அதற்கு நாம் தயார் ஆகாதது புலப்படுகிறது. வானிலை மாற்றங்கள் பேரிடர் ஆகிவிடாத அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டிய அவசியமும் உருவாகியிருக்கிறது.
வட இந்தியாவில் பருவக்காற்று வலுவடைவதற்கு முன், தீவிரமான, செறிவான இடி-மின்னல்-புயலுடன் கூடிய மழை பெய்யும். இதை ‘ஆந்தி’ எனக் குறிக்கின்றனர். திடீரெனக் காற்றின் வேகம் அதிகரித்துப் பெருமளவில் தூசியைக் கிளப்பிவிட்டுக் குறுகிய நேரத்தில் தணிந்துவிடும் அல்லது அதைத் தொடர்ந்து கனமழை ஏற்படும்.
அண்மைக் காலத்தில் கோடை வெப்பநிலை மிகவும் அதிகரிப்பதால் நிலத்துக்கு மேல் தீவிரத் தாழ்வு அழுத்த மண்டலம் உருவாகிறது. இதனால் தரைமட்டத்தை ஒட்டிய காற்று வேகமாக வெப்பம் அடைந்து விரிவடைவதே இந்த நிகழ்வுக்குக் காரணம் எனப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மே 5, 13, 14 ஆகிய நாள்களில் வழக்கத்தைவிடத் தீவிரமாக ‘ஆந்தி’ மழை பெய்தது. புயலுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன; பல கூரைவீடுகள் சேதமடைந்தன.