

வாக்களிப்பதும் தேர்தலில் போட்டியிடுவதும் அடிப்படை உரிமைகள் அல்ல என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கெனவே பொதுத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களை முன்வைத்துச் சில வழக்குகளில் இதேவிதமான வழிகாட்டல் வழங்கப்பட்டிருப்பினும், கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களில் எழுகிற பல சிக்கல்களை இந்தத் தீர்ப்பு நிச்சயம் குறைக்கும்.
இந்தியாவில் ஏறக்குறைய 10 லட்சம் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தான் மாநிலப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட - பால் விநியோகத்தில் குறைந்தபட்சக் காலமாவது ஈடுபட்டிருத்தல், தொடர்ச்சியான செயல்பாட்டில் இருத்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து ஓர் உறுப்பினர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
2022இல் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், உறுப்பினர்களின் சுதந்திரத்தைத் தேர்தல் நிபந்தனைகள் கட்டுப்படுத்துவதாகக் கூறி அவை செல்லாதவை என அறிவித்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் விசாரித்தது.
‘வாக்களிக்கும் உரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் அல்ல; சட்டபூர்வமான உரிமைகள்தான் (Statutory rights). வேட்பாளருக்கான தகுதி நிபந்தனைகள் அரசமைப்புச் சட்டத்தை மீறவில்லை’ என இந்த அமர்வு தீர்ப்பளித்தது.
கூட்டுறவுச் சங்கங்கள் அரசு அமைப்பு அல்ல எனவும் அவற்றின் உள்நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளுக்குத் தேர்தல்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தலையிடுவது பொருந்தாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.