

அமெரிக்கா, ஈரான் இடையே கையெழுத்தான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துள்ளது கவலை அளிக்கிறது. மேற்காசியாவில் மீண்டும் பதற்றச் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைதி ஏற்பட இரு தரப்பும் முன்வர வேண்டியது அவசியம்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் மேற்காசியாவில் பதற்றச் சூழல் உருவானது. பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கிய ஈரான், ஹார்முஸ் நீரிணையையும் மூடியது. இது உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் ஜூன் 17இல் அமெரிக்கா - ஈரான் இடையே 60 நாள்களுக்கான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது, புதிய நம்பிக்கையை உருவாக்கியது.
ஒப்பந்தத்தின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிப்பதாகவும், அணு ஆயுதத்தைத் தயாரிக்காமல் இருப்பதாகவும் ஈரான் உறுதியளித்தது; கடல்வழி முற்றுகையை நீக்கவும், தடைகளைத் தளர்த்தவும், முடக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியை ஈரான் பயன்படுத்த அனுமதிக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டது.