

தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், தெருநாய்களுக்குக் கருத்தடை செய்யும் திறனை மேம்படுத்த மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது.
தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்ட வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது. பொது இடங்களில் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை ஏற்கெனவே வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துத் தெருநாய்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் (அமிகஸ் கியூரி) கவுல் அகர்வால், உச்ச நீதிமன்றம் விதித்த வழிகாட்டுதல்களின்படி தெருநாய்களுக்குக் கருத்தடை செய்வதைப் பல மாநிலங்கள் முறையாகப் பின்பற்றவில்லை என்றும் ஆந்திர மாநிலத்தில் மட்டும் சராசரியாகத் தினமும் 1,619 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.