

இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் கிளையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன.
நான்கு ஆண்டுகளாக இக்கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெற்றும்கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பெண்களின் பணியிடப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்புகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் பிபிஓ மையத்தில் 170 ஊழியர்கள் இரண்டு ஷிஃப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பணிபுரியும் மேலதிகாரி ஒருவர் போலியான திருமண வாக்குறுதி அளித்துத் தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாகப் பெண் ஊழியர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, பல பெண்கள் வேறு சிலர் மீது பாலியல் புகார்களை அளித்தனர்.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மூத்த மேலாளர் அஸ்வினி சைனானி, தௌஃபிக் அக்தர், டேனிஷ் ஷேக் உள்பட எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் ஊழியரான நீடா கானைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். நாசிக் அலுவலகத்தில், பெண் ஊழியர்களிடம் வரம்புமீறிப் பேசுவது, சமூக வலைத்தளங்களில் பின்தொடர்வது, தனிப்பட்ட விஷயங்களை விவாதிப்பது எனப் பல்வேறு குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன.