

கட்டுமானப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பிற மாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டுசெல்லத் தற்காலிகத் தடை விதிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் வெட்டப்படாத கற்கள், பாறாங்கற்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் எம்.சாண்ட் உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப் பொருள்களின் விலை 30%க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகக் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
குவாரிகளில் நடைபெற்ற சோதனையும் அதைத் தொடர்ந்து சில குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும்கூட விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என ஒரு தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திச் சிலர் பதுக்கல் வேலைகளில் ஈடுபட்டாலும், தட்டுப்பாடு அதிகரித்து விலை அதிகரித்திருக்கக்கூடும் என்றும் பேசப்பட்டது.
முறைகேடான குவாரிகளில் சோதனை நடத்தித் தடை விதிப்பதோடு அண்டை மாநிலங்களுக்குக் கொண்டுசெல்லப்படும் கட்டுமானப் பொருள்களின் அளவைக் கட்டுப்படுத்தினாலே தட்டுப்பாடு குறைந்து விலை குறையும் என்கிற தீர்வு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு அப்படியொரு அரசாணையை அரசிதழில் வெளியிட்டிருப்பது. தீர்வுக்கான முன்னோட்டம் என்றே கருதலாம்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 3,000 கருங்கல் குவாரிகளும் அரசு அனுமதி பெற்ற 400-க்கும் மேற்பட்ட எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பப்படுகின்றன.